ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்.. ஓபிஎஸ் பிளானை முறியடிக்க எடப்பாடி பக்கா வியூகம்?
சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி யாரை வேட்பாளராக நிறுத்துவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் அந்த தொகுதியை கூட்டணியை சேர்ந்த தமாகவுக்கு ஒதுக்குவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டசபை உறுப்பினராக இருந்தவர் திருமகன் ஈவெரா. இவர் காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார். அதில் அவர் 67,300 வாக்குகளை பெற்று வென்றார்.
இவர் தனது தொகுதியில் பணிகளை சிறப்பாக ஆற்றிக் கொண்டிருந்த நிலையில் தற்போது கடந்த ஜனவரி 4 ஆம் தேதி மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டார். இதையடுத்து இந்த தொகுதி காலியானதாக தற்போது நடந்த சட்டசபை கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டது.

இடைத்தேர்தல்
இந்த தொகுதிக்கு விரைவில் இந்த ஆண்டே இடைத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் எந்தெந்த வேட்பாளர்கள் களம்காண்பார்கள் என்ற யூகங்கள் றெக்கை கட்டி பறக்கின்றன. அந்த வகையில் காங்கிரஸுக்கு கொடுக்கப்பட்ட இந்தத் தொகுதியில் இடைத்தேர்தலில் திமுகவே போட்டியிடலாம் என கருதுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுக கூட்டணி சார்பில் யார் போட்டி
இந்த தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது அதிமுகவில் ஒற்றை தலைமை யாருக்கு என்ற பிரச்சினை நிலவுகிறது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளரை களமிறக்க திட்டமிடுவதாக சொல்லப்படுகிறது. ஆனால் கடந்த முறை உள்ளாட்சித் தேர்தலில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் விண்ணப்பம் பி- யில் கையெழுத்திட வேண்டும் என்பதால் அதிமுக சார்பில் யாரும் போட்டியிடவில்லை.

இடைக்கால பொதுச் செயலாளர்
இந்த முறையும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டதாகவே அண்மையில் நடந்த சில விஷயங்கள் சான்றாக பார்க்கப்படுகின்றன. இதனால் அதிமுக சார்பில் வேட்பாளரை நிறுத்த எடப்பாடி பழனிசாமி யோசனையில் இருந்து வருகிறார்களாம். அதே வேளையில் ஓபிஎஸ்ஸும் தன் பங்குக்கு வேட்பாளரை நிறுத்தி அது எதிர்க்கட்சிக்கு சாதகமாக போய்விட்டால் என்ன செய்வது என்ற யோசனையும் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிறதாம்.

அதிமுகவின் பலம்
இந்த நிலையில் அதிமுகவின் பலம் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக ஓபிஎஸ்ஸிடம் போட்டி வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என பேசுமாறு சில மாஜிக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஐடியா கொடுக்கிறார்களாம். ஆனால் அதை எடப்பாடி பழனிசாமி ஏற்க மறுத்துவிட்டதாக தெரிகிறது. இந்த இடைத்தேர்தலில் போட்டியிடாமல் அந்த தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கிவிட எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளாராம்.

ஓபிஎஸ்ஸுடன் மல்லுக்கட்டு
இப்போது ஓபிஎஸ்ஸுடன் மல்லுக்கட்டுவதை விட கூட்டணி கட்சிக்கு தொகுதியை விட்டு கொடுத்துவிட்டால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் சட்டரீதியாக வரும். அப்போது இரட்டை இலை சின்னத்துடன் போட்டியிட்டால்தான் மக்கள் குழப்பமில்லாமல் வாக்களிப்பர் என்பது எடப்பாடி பழனிசாமியின் நிலைப்பாடாம்.

ஈரோடு கிழக்கு தொகுதி யாருக்கு
இதனால் எந்த கூட்டணிக்கு ஈரோடு கிழக்கு தொகுதியை ஒதுக்கலாம் என எடப்பாடி பழனிசாமி யோசனை செய்துள்ளார். அப்போது அவருக்கு எட்டியது, அதிமுக கூட்டணியில் பாஜக இணையும் என அக்கட்சியின் மூத்த தலைவர்கள் சொல்லிக் கொண்டே இருந்தாலும் பல இடங்களில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசுவது, தமிழகத்திலிருந்து 25 பாஜக எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்படுவர்.

39 தொகுதிகள்
மொத்தம் இருப்பதே 39 தொகுதி இதில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜகவுக்கு 25 இடங்கள் எப்படி ஒதுக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படியானால் பாஜக தனித்து போட்டியா என்பது தெரியவில்லை. எனவே ஈரோடு தொகுதியை தனது மற்றொரு கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்குவது என எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளாராம்.

என்ன காரணம்
இதற்கு ஒரு காரணமும் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் திருமகன் ஈவெரா 67,300 வாக்குகளை பெற்று வென்றார். அது போல் அதிமுக சார்பில் கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் (தமாக) போட்டியிட்டது. இந்த கட்சியின் சார்பில் போட்டியிட்ட எம். யுவராஜா 58,396 வாக்குகளை பெற்று இரண்டாவது இடத்தை பெற்றார். அதாவது வெறும் 8,904 வாக்குகளில்தான் யுவராஜா தோல்வி அடைந்தார். எனவே தமாகவுக்கு ஈரோடு கிழக்கு தொகுதியை ஒதுக்கினால்தான் சரியாக இருக்கும் என்பது எடப்பாடி பழனிசாமியின் கணக்காக உள்ளதாம்.












Click it and Unblock the Notifications