ஞானசேகரனுக்கு 2 மணி நேரம் குரல் பரிசோதனை.. அண்ணா பல்கலைக்கழக மாணவி பலாத்கார வழக்கில் விசாரணை தீவிரம்
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனுக்கு இன்று குரல் மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டது. குரல் பரிசோதனை முடிந்த பின் ஞானசேகரனை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்த உள்ளனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி, பல்கலை வளாகத்திலேயே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் முதல் தகவல் அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் திமுகவை சேர்ந்தவர் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின், அவர் திமுக அனுதாபி தான் என்றும் கட்சி நிர்வாகி இல்லை என்றும் விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில், ஞானசேகரன் மீது தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். , இந்த சம்பவத்தில் மேலும் ஒருவர் தொடர்புடையதாகவும், பாதிக்கப்பட்ட மாணவி சார் என யாரிடமோ பேசியதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை விசாரிக்க 3 பெண் அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழுவை அறிவித்தது. அண்ணாநகர் துணை கமிஷனர் சிநேக பிரியா தலைமையிலான 3 பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எழும்பூரில் உள்ள சிறைத்துறை அலுவலகத்தில் வைத்து சிறப்புப் புலனாய்வுக் குழு போலீசார் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே ஞானசேகரனுக்கு 7 ஆம் தேதி (நாளை) வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஞானசேகரன் செல்போனில் பேசிய ஆடியோ ஆதாரங்களை, உறுதி செய்ய ஆய்வகத்தில் குரல் பரிசோதனை செய்வதற்கு சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் முடிவு செய்தனர்.
இதையடுத்து ஞானசேகரனிடம் குரல் பரிசோதனை நடத்த அனுமதி கோரி சிறப்பு புலனாய்வு குழு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியன், இன்று (பிப்.6) ஞானசேகரனுக்கு குரல் பரிசோதனை நடத்த அனுமதித்து உத்தரவிட்டார். ஞானசேகரன் குரல் சோதனை செய்ய அனுமதி கேட்ட வழக்கு விசாரணைக்காக நேரில் ஆஜர்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு, நீதிமன்ற உத்தரவின்படி இன்று குரல் பரிசோதனை செய்யப்பட்டது. ஞானசேகரனிடம் இரண்டு மணி நேரம் குரல் மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டது. தடயவியல் துறை துணை இயக்குனர் சோபியா, உதவி இயக்குனர் நளினி நடராஜன், தொழில் நுட்பபிரிவு அதிகாரி லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய குழுவினர், ஞானசேகரனுக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொண்டனர்.
2 மணி நேர குரல் சோதனைக்கு பின் சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு ஞானசேகரன் அழைத்துச் செல்லப்பட்டார். குரல் மாதிரி பரிசோதனை தொடர்பான அறிக்கை விரைவில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என தடய அறிவியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்ற அனுமதி பெற்று நாளை அல்லது நாளை மறுநாள் ஞானசேகரனுக்கு இரத்த பரிசோதனை செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த இரண்டு பரிசோதனைகளின் முடிவுகளை பொறுத்து தான் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications