ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடை கிடையாது! உச்ச நீதிமன்றம் செல்லுங்கள்.. திருமாவளவன் வழக்கில் திட்டவட்டம்!
சென்னை: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தான் மேல் முறையீடு செய்ய முடியும் எனவும்,. உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடியாது எனவும் பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 51 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சார்பில் அக்டோபர் 2ஆம் தேதி அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரி தமிழக உள்துறை அமைச்சகம் மற்றும் டிஜிபியிடம் கடந்த மாதம் அந்த அமைப்பு சார்பாக மனு அளிக்கப்பட்டது. இந்திய சுதந்திர தின 75ஆம் ஆண்டு, அம்பேத்கரின் பிறந்த தின நூற்றாண்டு, விஜய தசமி ஆகியவற்றை முன்னிட்டு இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்கு தமிழ்நாடு போலீஸ் அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து சென்னையை சேர்ந்த சுப்ரமணியன், கடலூரை சேர்ந்த சண்முகசுந்தரம், ஈரோட்டை சேர்ந்த செந்தில்நாதன் உள்ளிட்ட 9 பேர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

உத்தரவு
இந்த வழக்கில் நீதிபதி ஜி.கே.இளந்திரையன், அக்டோபர் 2ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு செப்டம்பர் 28ஆம் தேதிக்குள் அனுமதி வழங்க வேண்டுமென காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். அணிவகுப்பு ஊர்வலத்திற்கான நிபந்தனைகள் குறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார். ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

திருமாவளவன்
இந்த உத்தரவை திரும்ப பெற கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். திருமாவளவன் தனது மனுவில், ஆர் எஸ் எஸ் அமைப்பின் முந்தைய கால நடவடிக்கைகளை கருத்தில் கொள்ளாமல் அதன் அணிவகுப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மத நல்லிணக்கத்தை குலைத்து பிரித்தாளும் கொள்கையை பின்பற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த கோட்சே, மகாத்மா காந்தியை கொலை செய்த போது இனிப்பு விநியோகித்து கொண்டாடியது ஆர் எஸ் எஸ்.

மனு
மகாத்மா காந்தியை கொன்ற ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துக்கு காந்தி ஜெயந்தி அன்று அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்க கூடாது, விஜய தசமி மீது நம்பிக்கை இல்லாத அம்பேத்கரின் கொள்கைக்கு முரணாக இந்த அணிவகுப்பு நடத்தப்படுகிறது, அம்பேத்கரை இந்துத்துவா ஆதரவாளராக சித்தரிக்க ஆர்.எஸ்.எஸ். முயற்சிக்கிறது, என்று மனுவில் குறிப்பிட்டார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று அவர் தரப்பில் முன்வைக்கப்பட்ட முறையீட்டை தனி நீதிபதி இளந்திரையன் ஏற்க மறுத்து விட்டார்.

மறுப்பு
இந்த விவகாரம் தொடர்பாக பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வில் திருமாவளவன் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. முறையீட்டைக் கேட்ட பொறுப்புத் தலைமை நீதிபதி அமர்வு, வழக்கில் ஒரு தரப்பாக இல்லாத நிலையில், தனி நீதிபதி உத்தரவை திரும்ப பெற கோரி மனு தாக்கல் செய்ய முடியாது என்றும் மேல் முறையீடு தான் தாக்கல் செய்ய முடியும் என்றும் தெரிவித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து மேல் முறையீடு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் இன்று திருமாவளவன் தரப்பில் மீண்டும் முறையீடு செய்யப்பட்டது.

மேல் முறையீடு
இந்த முறையிட்ட கேட்ட நீதிபதிகள், ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் குற்றவியல் வழக்காக தாக்கல் செய்யப்பட்டதா இல்லையா என்பதை ஆய்வு செய்ய வேண்டி இருப்பதாக தெரிவித்திருந்தது.
உணவு இடைவேளைக்கு முன் இதுகுறித்து விளக்கம் அளித்த பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு, ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்குகள் குற்றவியல் வழக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தான் மேல் முறையீடு செய்ய முடியும் என்றும், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்றும் அது விசாரணைக்கு உகந்ததல்ல என விளக்கம் அளித்தனர்.












Click it and Unblock the Notifications