அமெரிக்கா ஓவர்நைட்டில் வெளியிட்ட டேட்டா.. உடனே பறந்த தங்கம் விலை! அடுத்த வாரம் இன்னொரு சம்பவம் காத்திருக்கு
சென்னை: தங்கம் விலை கடந்த சில காலமாகவே தாறுமாறாக உயர்ந்து வருவதால் மக்கள் பெரும் வேதனையில் இருக்கிறார்கள். ஆனால், தங்கம் விலை இப்போதைக்குக் குறைவது போலத் தெரிவில்லை. இதற்கிடையே நேற்று அமெரிக்கப் பணவீக்கம் தொடர்பாக முக்கிய டேட்டா வெளியாகியுள்ள நிலையில், இதை வைத்துப் பார்க்கும் போது தங்கம் விலை மேலும் உயரும் என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
நமது நாட்டில் தங்கத்தில் முதலீடு செய்வதை அனைத்து தரப்பினரும் ரொம்பவே முக்கியமான ஒன்றாகப் பார்ப்பார்கள். தங்கத்தை வாங்குவது என்பது சேமிப்பின் ஒரு பகுதியாக இருக்கும் அதேநேரம் அது நமது நாட்டில் கலாச்சார ரீதியாகவும் மிக முக்கியமான இடத்தை பெற்றிருக்கிறது. இதனால் குழந்தை பிறப்பு முதல் அனைத்து சுப காரியங்களிலும் தங்கத்திற்கு முக்கிய பங்கு இருக்கும்.

தங்கம் விலை
ஆனால், கடந்த சில காலமாகத் தங்கம் விலை மிக வேகமாக உயர்ந்து வருகிறது. பொருளாதார சூழல், புவிசார் அரசியல் குழப்பம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் விலை உச்சத்தைத் தொட்டிருக்கிறது. இதனால் மிடில் கிளாஸ் மக்கள் கூட தங்கத்தை வாங்க முடியாத சூழல் நிலவுகிறது. இன்று கூட சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ 720 உயர்ந்தது. இப்போது ஒரு கிராம் தங்கமே ரூ. 10,240-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை எப்போ தான் குறையும் என மக்கள் நீண்ட காலமாகவே எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். ஆனால், தற்போதிருக்கும் சூழலில் தங்கம் விலை குறைவது போலத் தெரியவில்லை.
அமெரிக்கா வெளியிட்ட டேட்டா
ஏனென்றால் நேற்றிரவு அமெரிக்க தொழிலாளர் துறை அந்நாட்டின் பணவீக்கம் தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதன்படி அமெரிக்காவில் ஆகஸ்ட் மாத பணவீக்கம் 2.9%ஆக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஜூலை மாத பணவீக்கமான 2.7%ஐ விட அதிகமாகும். அதேபோல கோர் பணவீக்கம் (எரிபொருள், உணவு இல்லாமல்) 3.1%ஆக உயர்ந்துள்ளன. இந்த இரண்டும் 2%க்கு கீழ் இருக்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் இலக்கு. ஆனால், அதை விட மிக அதிகமாகவே பணவீக்கம் இருக்கிறது.
பொதுவாகவே பணவீக்கம் அதிகரித்தால் தங்கம் விலை அதிகரிக்கும். அதுதான் இப்போதும் நடந்துள்ளது. இதன் காரணமாகவே அமெரிக்கப் பணவீக்க டேட்டா வெளியாவதற்கு முன்பு இரு நாட்கள் தங்கம் விலையில் ஏற்றம் இல்லாமல் இருந்த சூழலில் இன்று அதன் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.
வேலைவாய்ப்பு
இது மட்டுமில்லை கடந்த வாரம் வெளியான அமெரிக்க வேலை டேட்டாவும் அவ்வளவு ஒன்றும் சாதமாக இல்லை. கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவில் வெறும் 22,000 புதிய வேலைகள் மட்டுமே உருவாக்கப்பட்டிருந்தது. வேலையின்மை விகிதமும் 4.2%இல் இருந்து 4.3%ஆக அதிகரித்தது.. இதனால் அமெரிக்க பெடரல் வங்கி (நம்ம நாட்டின் ரிசர்வ் வங்கி போல) வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்துள்ளது.
தங்கம் விலை உயரும்
அமெரிக்க மத்திய வங்கி கடந்த ஆண்டு முதல் வட்டி விகிதங்களை மாற்றாமல் வைத்திருக்கிறது. ட்ரம்ப் தரப்பு வட்டி விகிதத்தைக் குறைக்கச் சொல்லி கடும் அழுத்தம் கொடுத்து வருகிறது. அமெரிக்காவில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க வட்டி விகித குறைப்பு அவசியமாகிறது. அடுத்த வாரம் அமெரிக்க பெடரல் வங்கி கூட்டம் நடக்கும் சூழலில், அதில் வட்டி விகிதம் 0.25% குறைக்கப்படும் எனத் தெரிகிறது. பணவீக்கம் அதிகம் என்றாலும் அது மிக மோசமாக இல்லை என்பதால் வட்டி விகிதம் குறைக்கப்பட வாய்ப்புகள் அதிகம். இதுபோல வட்டி விகிதம் குறைக்கப்பட்டாலும் தங்கம் விலை உயரும்.
இதுபோக உலகில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்களும் கூட இப்போதைக்கு முடிவுக்கு வருவது போல தெரியவில்லை. இப்படிச் சுற்றிச் சுற்றி எங்கு பார்த்தாலும் குழப்பமான சூழல் நிலவி வருவதால் தங்கம் விலை வரும் நாட்களில் தொடர்ந்து உயர்ந்து, அடுத்தடுத்து புதிய உச்சத்தையே தொடும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications