சென்னை திருவொற்றியூர் பயணிகளுக்கு குட் நியூஸ்! ஓராண்டுக்குள் பிரமாண்டமாக அமைகிறது புது பஸ் ஸ்டாண்ட்
சென்னை: சென்னை திருவொற்றியூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே 14 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைய உள்ளது. அடுத்த ஓராண்டுக்குள் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். நவீன வசதிகளுடன் இந்த பேருந்து நிலையம் அமைய உள்ளது. நெரிசல் மிக்க பகுதிகளில் ஒன்றாக உள்ள திருவொற்றியூரில் மெட்ரோ ரயில் நிலையம் அருகிலேயே புதிய பேருந்து நிலையம் அமைய இருப்பது பயணிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
சென்னை வடசென்னை எப்போதுமே நெரிசல் அதிகம் காணப்படும் பகுதியாகும். பீக் நேரங்களில் சாலைகளில் கடுமையான கூட்ட நெரிசல் காணப்படும். தற்போது மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படுவதால் பயணிகளுக்கு பெரும் வரப்பிரசாதம் போல அமைந்துள்ளது. போக்குவரத்து நெரிசலான நேரங்களில் கூட மெட்ரோ ரயில்களில் சென்றால் எந்த காலதாமதமும் இன்றி சரியான நேரத்தில் பயணிகள் பயணம் செய்ய முடியும்.

இதனால், பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். அதே நேரத்தில் திருவொற்றியூரில் மெட்ரோ பணியின் போது பேருந்து நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டது. அதாவது, மாணிக்கம் நகர் பிரதான சாலையில் இருந்த பேருந்து நிலையம் அஜாக்ஸ் நகருக்கு மாற்றப்பட்டது. இந்த இடத்தில் இருந்து தான் தற்போது பிராட்வே, தாம்பரம் உள்ளிட்ட நகரின் முக்கியமான இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கிளாம்பாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளுக்கும் இந்த பேருந்து நிலையத்தில் இருந்துதான் பேருந்துகள் செல்கின்றன.
தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தும் இந்த பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லை. இதனால், பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்த நிலையில்தான், மெட்ரோ ரயில், பேருந்து வசதியை ஒருங்கிணைக்கும் விதமாக புதிய பேருந்து நிலையத்தை கட்ட திமிட்டமிட்டுப்பள்ளது. இதற்கான ஒப்பந்த புள்ளி வெளியிடப்பட்டுள்ளது. இது பற்றி மெட்ரோ அதிகாரிகள் கூறியதாவது:-
திருவொற்றியூர் அருகே புதிய பேருந்து நிலையம் அமைக்க திட்டமிட்டு டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. தற்போதுள்ள பழைய கட்டிடங்களை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டப்படும். பேருந்து நிலையம், பணிமனை தனித்தனியாக இருக்கும். பேருந்துகள் உள்ளே வந்து செல்ல போதிய சாலைகள், பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் ஆகியவற்றை செய்து கொடுக்கப்படும். அதாவது, டாய்லட் வசதி, வாகன பார்க்கிங் வசதி ஆகியவை செய்து கொடுக்கப்படும். இன்னும் ஓராண்டுக்குள் இந்த பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறோம்" என்றார்.
இந்த பேருந்து நிரலையத்தில், டிஜிட்டல் தகவல் பலகைகள் உள்ளிட்டவையும் வைக்கப்பட வேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதன் மூலம் மெட்ரோ நிலையம், விமான நிலையம் போல பேருந்து நிலையங்களிலும் நேரத்தை எளிதாக தெரிந்து கொள்ள முடியும்.
ஒருங்கிணைந்த பேருந்து நிலையமாக அமைவதால் மெட்ரோ ரயில்களின் நேரம் மற்றும் பஸ்கள் புறப்படும் நேரம் ஆகிய தகவல்களுடன் டிஜிட்டல் போர்டுகள் அமைக்கப்பட்டால் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள். நெரிசல் மிக்க இடத்திற்கு மாற்றாக புதிய பேருந்து நிலையம் கட்டப்படும் என்று மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறியிருப்பது திருவொற்றியூர் பயணிகளுக்கு நிம்மதியை கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications