அரசு ஊழியர்கள் நடுநிலையோடு செயல்படுபவர்கள்.. ஆர்எஸ்எஸ்ஸில் எப்படி சேர முடியும்? ஜவாஹிருல்லா கேள்வி
சென்னை: மத்திய அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸில் சேரலாம் என்கிற உத்தரவினை திரும்ப பெற வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் எம்எச் ஜவாஹிருல்லா வலியுறுத்தியிருக்கிறார்.
கடந்த 1960 களில் இந்திரா பிரதமராக இருந்தபோது ஆர்எஸ்எஸ் அமைப்பில் அரசு ஊழியர்கள் சேரவும், அதன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டது. முன்னதாக 1948 ல் தேசதந்தை மகாத்மா காந்தி படுகொலைக்கு பிறகு அந்த அமைப்புக்கு சர்தார் வல்லபாய் படேல் தடை விதித்தார்.

அரசு ஊழியர்கள்: இந்நிலையில் 3-வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ள மோடி தலைமையிலான பாஜக அரசு அரசு இந்த தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் இனி அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேரலாம் அதன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 58 ஆண்டுகால தடை நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த தடையை நீக்கியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
அந்தவகையில், மனிதநேய மக்கள் கட்சியும் தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளது.. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் எம்எச் ஜவாஹிருல்லா வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
அரசு விதி: "இந்திய விடுதலைக்குப் பிறகு ஆர்எஸ்எஸ் அமைப்பு மூன்று முறை இந்தியாவில் தடை செய்யப்பட்டிருக்கிறது.1966-ல் அதிகாரப்பூர்வமாக ஆர்.எஸ்.எஸ் நடவடிக்கைகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டது. அரசு ஊழியர்களாக இருப்பவர்கள் எந்த அரசியல் கட்சியிலும் உறுப்பினர்களாக இருக்கக்கூடாது என்பது அரசு விதி. அதன்படி தற்போது வரை மத்திய மாநில அரசு மற்றும் பொது நிறுவனங்களில் இந்த விதி பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் சேரும் வகையில் அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை, பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சகம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகத் தெரிகிறது.
இது ஆபத்து: வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியத் திருநாட்டில் சமூக ஒற்றுமையைக் குலைக்கின்ற வகையில் அடிப்படைவாத செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் ஆர்எஸ்எஸ் அமைப்பில் அரசு ஊழியர்களை பணியாற்ற அனுமதிப்பது இந்தியாவின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய ஆபத்தாக அமையும்.
58 ஆண்டுக்கால தடையை தற்போது நீக்க ஒன்றிய அரசுக்கு என்ன அவசியம் ஏற்பட்டுள்ளது? மதமாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு நடுநிலையோடு அரசு ஊழியர்கள் செயல்படுவதை மாற்றுகின்ற வகையில் இந்த அனுமதி அமைந்துவிடும்.
திரும்ப பெற வேண்டும்: பல்வேறு துறைகளில் ஆர்எஸ்எஸ் பாசிச சிந்தனையாளர்கள் ஊடுருவி இருக்கும் நிலையில் அவர்களைக் களை எடுப்பதற்குப் பதிலாகச் சுதந்திரமாகச் செயல்படுவதற்கான அங்கீகாரத்தை ஒன்றிய அரசு இந்த நடவடிக்கை மூலம் வழங்குகிறது. உடனடியாக இந்த உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும். இந்தியா கூட்டணி தலைவர்கள் இந்த ஆணைக்கு எதிராகக் கடுமையாகக் களமாட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" என்று பேராசிரியர் ஜவாஹிருல்லா கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications