அரசு பேருந்தில் பயணிப்போருக்கு.. டிவி, பிரிட்ஜ், பைக் பரிசு.. போக்குவரத்துக் கழகம் சூப்பர் அறிவிப்பு
சென்னை: பண்டிகைக் காலங்களில் பெரும்பாலான மக்கள் தங்களது குடும்பத்துடன் கொண்டாடுவதற்காக சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். அவ்வாறு பண்டிகைக் காலங்களில் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு எல்இடி டிவி, இருசக்கர வாகனம், ஃபிரிட்ஜ் உள்ளிட்ட பொருள்களைப் பரிசாக வழங்கப்படும் என்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சூப்பர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் என பல்வேறு தேவைகளுக்கான பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். பண்டிகைக் காலங்களில் இவர்கள் தங்களது குடும்பத்துடன் கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்குச் செல்வது வழக்கம்.

அந்த வகையில், தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை தொடர் விடுமுறை, கிறிஸ்துமஸ், புத்தாண்டு என அனைத்துப் பண்டிகைகளுக்கு பேருந்து மற்றும் ரயில்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும். இதனால், ரயில்வே துறை மற்றும் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு ரயில்கள், சிறப்பு பேருந்துகள், கூடுதல் நேரங்களில் இயக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்படும்.
சில நேரங்களில் சிறப்பு ரயில்கள், பேருந்துகளிலும் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலே தீர்ந்துவிடும். இதனால், ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் செலுத்தி பொதுமக்கள் செல்லும் நிலையும் உள்ளது.
இந்நிலையில், பண்டிகைக் காலங்களில் சொந்த ஊருக்குச் செல்லும் பொதுமக்களுக்கு இனிப்பான செய்தியை அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. பண்டிகை தினங்களில் அரசுப் பேருந்தில் பயணிப்பவர்களுக்கு இரு சக்கர வாகனம், எல்இடி தொலைக்காட்சிப் பெட்டி, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருள்களை பரிசாக வழங்க முடிவ செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக் குழு இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிப்போரை ஊக்குவிக்கும் வகையில் குலுக்கல் முறையில் மாதந்தோறும் 3 பேருக்கு தலா ரூ. 10,000, 10 பேருக்கு தலா ரூ. 2,000 பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.
இந்த குலுக்கலில் வார இறுதி நாள்கள், திருவிழாக்கள், சிறப்பு நாள்களில் பயணிப்போர் இடம்பெற முடியாது. தற்போது அனைத்து பயணிகளும் பயன்பெறும் வகையில் குலுக்கல் முறையில் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, விடுமுறை நாள்கள் உள்பட முன்பதிவு செய்யும் அனைத்து பயணிகளின் பயணச்சீட்டும் குலுக்கலில் இடம்பெறும்.
இத்துடன் மேலும் ஒரு சிறப்பு குலுக்கல் முறையும் அறிமுகப்படுத்தப்படுகிறது. அதில், முன்பதிவு செய்யும் பயணிகளில் மூவருக்கு உயர் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்படும். இது நவம்பர் 21 முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி வரை பயணிப்போருக்கு மட்டுமே பொருந்தும்.
அவர்களில் தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு முதல் பரிசாக இரு சக்கர வாகனம், இரண்டாவது பரிசாக எல்இடி ஸ்மார்ட் தொலைக்காட்சி, மூன்றாவது பரிசாக ஃபிரிட்ஜ் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications