விநாயகர் சதுர்த்தி நாளில் தடையை மீறி ஊர்வலம் சென்றால் அரசு நடவடிக்கை எடுக்கும் - ஹைகோர்ட்
விநாயகர் சதுர்த்தியன்று தடையை மீறி ஊர்வலம் செல்ல முற்படுபவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது
சென்னை: விநாயகர் சதுர்த்தியன்று தடையை மீறி ஊர்வலம் செல்ல முற்படுபவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது
கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால், விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்து செல்லவும் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் பத்திரிகையாளர் அன்பழகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,
ஏற்கனவே மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் விநாயகர் சிலை ஊர்வலம் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும் ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்..
இந்து முன்னணியினர் ஒரு லட்சத்து 50 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழி படுவோம் என தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டிய மனுதாரர் அவற்றை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் தடையை மீறி ஊர்வலமாக எடுத்துச் சென்றால் இந்து முன்னணியின் மூத்த தலைவர் ராமகோபாலன் மற்றும் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்டோரை கைது செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்
இந்த மனு இன்று தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில் தமிழக அரசு ஏற்கனவே விநாயகர் சிலை வைத்து வழிபட தடைவிதித்துள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.
மேலும், அரசின் தடை உத்தரவை மீறுவோம் என இந்து முன்னணியின் மிரட்டல் குறித்து மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு, இதுபோன்ற மிரட்டல்களிலிருந்து அரசை பாதுகாப்பது நீதிமன்றத்தின் வேலை இல்லை என்ற தெரிவித்ததுடன், அரசு உத்தரவுகள் மீறப்பட்டால் அதை தமிழக அரசு கவனித்து கொள்ளும் எனவும் தெரிவித்தனர்.
இதேபோல, தடையை மீறி விநாயகர் சிலைகளை வைக்கும் இந்து முன்னணி அமைப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசுக்கும், டிஜிபி க்கும் உத்தரவிடக் கோரி திருவண்ணாமலையைச் சேர்ந்த இளஞ்செழியன் என்பவர் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வு, தலைமை நீதிபதி அமர்வு பிறப்பித்த உத்தரவை மேற்கோள்காட்டி, முடித்து வைத்தது.