அதென்ன ஹிந்தியில?.. தமிழ்நாட்டிலதானே நடக்குது.. "அழைப்பிதழை" முதல்வருக்கு டேக் செய்த வன்னிஅரசு
பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நாளை நடக்க உள்ளது
சென்னை: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில்தான் இருக்கிறது.. தமிழர்கள் தான் நாளை பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்கள்... பட்டம் பெறுபவர்களும் தமிழ்இளைஞர்கள் தான்... ஆனால் திட்டமிட்டே இந்தி திணிக்கப்பட்டுள்ளது" என்று பட்டமளிப்பு விழா அழைப்பிதழ் குறித்து விசிக கருத்து தெரிவித்துள்ளது.
திருச்சி-புதுக்கோட்டை சாலையில் மாத்தூர் அருகே பாரதிதாசன் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பாரம்பரியமிக்க இந்த பல்கலையில் நாளை (9ம் தேதி) 37வது பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது.
கடந்த 2 வருடங்களாகவே கொரோனா தொற்று காரணமாக இந்த பட்டமளிப்பு விழா நடக்கவில்லை.. 2 வருடத்துக்கு பிறகு இப்போதுதான் நடக்க உள்ளது..
கஞ்சா, குட்கா, லாட்டரி ஒழிப்பு நடவடிக்கை: டிஜிபி அதிரடி உத்தரவு: பின்னனி இதுதான்
பட்டமளிப்பு விழா
இந்த பட்டமளிப்பு விழாவில் மாணவ, மாணவியர் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர் (பொ) கோபிநாத் தனி அறிக்கையாகவே வெளியிட்டுள்ளார்.. காலை 10.30 மணிக்கு விழா நடைபெற உள்ளது. தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்என் ரவி தலைமை வகித்து மாணவர்களுக்குப் பட்டமளித்து உரை நிகழ்த்த உள்ளார்.
ஆளுநர் ரவி
தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இந்த விழாவில் வாழ்த்துரை வழங்குகிறார்... டெல்லி இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சிக் கழகத் தலைவர் கனகசபாபதி சிறப்புரையாற்றுகிறார். பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக, தமிழ்நாடு ஆளுநர் ரவி, சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று காலை 10 மணிக்கு திருச்சிக்கு செல்கிறார். ஆளுநருக்கு மாவட்ட ஆட்சியர் அங்கு வரவேற்பு அளிக்கிறார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து கார் மூலம் ஆளுநர் ரவி, பாரதிதாசன் பல்கலைக்கழகம் செல்கிறார்.
சாமி தரிசனம்
அங்கு ஓய்வெடுக்கும் அவர், நாளை காலை 9 மணிக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்த பின்னர், 10:30 மணிக்குப் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். இரவு அங்கு தங்கும் ஆளுநர் ரவி, 10ஆம் தேதி காலை 10 மணிக்கு விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் செல்கிறார். தமிழ்நாடு ஆளுநரின் வருகையையொட்டி பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் உரிய பாதுகாப்பு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எதிர்பார்ப்பு
முதல்முறையாக பொறுப்பேற்ற ஆளுநர் ரவி கலந்து கொள்ளும் நிகழ்வு இதுவாகும்.. இதற்கான ஏற்பாடுகள் ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தாலும், மற்றொரு பக்கம் விழாவுக்கான அழைப்பிதழ் சர்ச்சையை தாங்கி வருகிறது.. இந்த அழைப்பிதழில் பாரதிதாசனும், தாமரையும் இணைந்தாற்போல் ஒரு லோகோ காணப்படுகிறது.. ஒருபக்கம் முதல்வர் ஸ்டாலின் போட்டோ, இன்னொரு பக்கம் ஆளுநர் ரவி போட்டோவுக்கு நடுவில் ஹிந்தி வார்த்தை இடம்பெற்றுள்ளது..
பதிவு
இந்த அழைப்பிதழை தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டு, விசிகவின் வன்னி அரசு தன்னுடைய கருத்தை பதிவிட்டு உள்ளார்.. அந்த ட்வீட்டில், "திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் தான் இருக்கிறது.தமிழர்கள் தான் நாளை பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்கள்.,பட்டம் பெறுபவர்களும் தமிழ்இளைஞர்கள் தான்.,ஆனால் திட்டமிட்டே, இந்தி திணிக்கப்பட்டுள்ளது. அழைப்பிதழ் அழகிய தாய்மொழியில் வரவேண்டும்" என்று பதிவிட்டு, அதை முதல்வர் ஸ்டாலினுக்கும், ராஜ்பவனுக்கு டேக் செய்துள்ளார். இந்த அழைப்பிதழ்தான் சோஷியல் மீடியாவில் முக்கிய கவனத்தை பெற்று வருகிறது.