விடாத ஆளுநர் ரவி.. புதிய கல்விக் கொள்கை தேவையாம்.. அரசுடன் மற்றொரு மோதல்
சென்னை: தமிழ்நாடு அரசால் தொடர்ந்து எதிர்க்கப்பட்டு வரும் புதிய தேசிய கல்விக்கொள்கைக்கு ஆதரவாக மீண்டும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசி இருக்கிறார். அப்படி என்ன பேசினார்?
மந்தைவெளி பகுதியில் மாணவர்களுக்காக ராதா சுவாமி என்ற சிறப்பு மையம் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நிகழ்வில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு மையத்தை திறந்து வைத்தார். இந்த விழாவில் பேசிய அவர், "ராதா சுவாமி சிறப்பு மையம் மாணவர்களுக்காக திறக்கப்பட்டு இருக்கிறது.
எதிர்காலத்தில் சிறந்த ஆளுமைகளை இந்த மையம் உருவாக்கும் என்று நான் நம்புகிறேன். இந்தியாவில் தற்போது உயர்கல்வியில் கலை படிப்புகளை பயிலும் மாணவர்களில் 70 சதவீதம் பேர் மட்டுமே முதுகலை படிப்புகளை முடிக்கின்றனர்." என்றார்.
தமிழக அரசுக்கு பறந்த லெட்டர்! பிரதமர் பாதுகாப்பில் குறைபாடு? விளக்கம் கேட்கும் ஆளுநர் ஆர்.என். ரவி
யுஜிசி அறிக்கை
பல்கலைக்கழக மானியக் குழு சமீபத்தில் வெளியிட்டு இருக்கும் அறிக்கையை சுட்டிக்காட்டி அவர் இக்கருத்தை தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி இதே நிலைதான் தமிழ்நாட்டிலும் தொடர்ந்து வருகிறது என்றார். தொடர்ந்து பேசிய அவர், "அறிவியல் படிப்புகளை மாணவர்கள் அதிகம் தேர்வு செய்வதில்லை.
புதிய கல்விக் கொள்கை
திறமையான ஆசிரியர்கள் இல்லாததன் காரணமாகவே மாணவர்கள் அதிகளவில் அறிவியல் படிப்புகளை தேர்வு செய்வது இல்லை. இதற்கு தீர்வு காணும் வகையில் புதிய தேசிய கல்விக்கொள்கை அமைந்து இருக்கிறது. அது இந்த சூழலில் இருந்து புதிய மாற்றத்தை கொண்டு வரும்." என்று அவர் இந்நிகழ்வில் உரையாற்றினார்.
அரசுடன் கருத்து வேறுபாடு
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசுக்கும் இடையே தொடர்ந்து பல்வேறு விவகாரங்களில் கருத்து வேறுபாடு உள்ளது. அதில் கல்வி முக்கியமான ஒன்றாக இருக்கிறது. பல்கலைக்கழக நிர்வாகம், நீட் விலக்கு மசோதாவில் ஆளுநர் கையெழுத்து போடாதது போன்றவை இன்னும் சர்ச்சையாக உள்ளது.
தொடர்ந்து ஆதரவு
அதேபோல் புதிய கல்விக்கொள்கை விவகாரத்திலும் திமுக அரசுடன் முரண்படுகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இதற்கு முன்பாகவும் புதிய கல்விக்கொள்கையை ஆதரித்து அவர் பேசி இருக்கிறார். கடந்த மே மாதம், "திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் தேசிய கல்வி கொள்கை தொடர்பான தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது.
திருவாரூர் கருத்தரங்கம்
இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, "தேசிய கல்வி கொள்கையை சிக்கல்கள் இன்றி சுமூகமாக செயல்படுத்துவது தொடர்பாக கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. தேசிய கல்வி கொள்கை சுமூகமாக நடைமுறைப்படுத்தப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
உலக நாடுகள்
பல்வேறு அரசாங்கங்களால் மறைக்கப்பட்ட இந்தியாவின் பாரம்பரியம், கலாச்சாரம் போன்றவற்றை மீட்டெடுப்பதே தேசிய கல்வி கொள்கையாகும். ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற பிரதமரின் இலக்கை அடைய தேசிய கல்வி கொள்கை வழி வகுக்கும். முந்தைய காலத்தில் இந்தியாவின் பொருளாதாரம் உலக நாடுகளின் பொருளாதாரத்தை ஒப்பிடும்போது 40% உயர்ந்து இருந்தது.
ஆங்கிலேயே கல்வி
ஆங்கிலேயர்கள் படிப்படியாக அதனை அழித்தனர். இந்திய மக்களின் தொழிற்சாலைகள், உழைப்பு, தளவாடங்கள், தொழில் நிறுவனங்களை ஆங்கிலேயர்கள் மற்றும் பிற நாட்டவர் எடுத்துச்சென்று தங்கள் நாடுகளில் சேர்த்து கொண்டனர். ஆங்கிலேயர்களின் எண்ணத்தின் மூலம் செயல்பாட்டிற்கு வந்த இந்த கல்விக் கொள்கையை 75 ஆண்டுகளுக்கு பிறகு சீர் செய்ய வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டு இருக்கிறது.
மக்கள் நல திட்டம்
இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு. ஆனால் தற்போது வேற்றுமையை வேற்றுமையாக பார்க்கும் போக்கு உள்ளது. ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் மக்கள் நலன் காக்கும் வகையில் திட்டங்களை கொண்டு வருகின்றனர். அதன் சாராம்சத்தை புரிந்து கொள்ளாமல் அவற்றை செயல்படுத்துவதால் இலக்கை முறையாக அடைய முடிவதில்லை.
தேசிய கல்விக்கொள்கை வேண்டும்
தேசிய கல்வி கொள்கை கருத்தரங்கில் பங்கேற்று இருக்கும் ஒவ்வொருவரும் நாட்டுப்பற்றுடன் செயல்பட வேண்டும். நாட்டில் புதிய தேசிய கல்வி கொள்கையை செயல்படுத்திட வேண்டும். இந்த தேசிய கல்விக் கொள்கை குறித்த 2 நாள் கருத்தரங்கம் இது குறித்த தெளிவை உருவாக்குவதற்கான அடித்தளமாக அமையும்." என்றார்.