3 நாள் தானே இருக்கு? திடீரென ஆன்லைன் ரம்மி சட்டம் பற்றி விளக்கம் கேட்ட ஆர்.என் ரவி.. ரெடியான திமுக
சென்னை: ஆன்லைன் ரம்மி தடை மசோதா தொடர்பாக சில சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டு தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் ரவி கடிதம் எழுதி உள்ளார்.
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி போன்ற ரம்மி கேம்களை தடை செய்வதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்த அவசர சட்டம் கொண்டு வரப்பட்டு அதன்பின் சட்டசபையில் அக்டோபர் 19ம் தேதி நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக ஏற்கனவே ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிப்பது குறித்து அவசர சட்டம் பிறப்பிப்பது தொடர்பாக ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அதில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை முறைப்படுத்த இயலாது என்பதால் தடை செய்ய வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டது.
ஆன்லைன் மூலமாக மருத்துவ கவுன்சில் தேர்தல்.. தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
ஆன்லைன் ரம்மி
பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் செயல்படுவதாகவும் இதனால் மக்கள் பலர் பாதிக்கப்படுவதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டது. இந்த சட்டத்தை கொண்டு வந்தால் தனியார் நிறுவனங்கள் கண்டிப்பாக கோர்ட்டுக்கு செல்லும். அப்படி செல்லும் வகையில் இருக்க கூடாது. கோர்டுக்கு போனாலும் வலுவாக இருக்க வேண்டும். கோர்டில் சட்டம் நிற்க வேண்டும் என்ற அடிப்படையில் இதை உருவாக்கி உள்ளனர். அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டு அதன்பின் அவசர சட்டமாக கொண்டு வரப்பட்டு பின்னர் சட்டசபையிலும் இது நிறைவேற்றப்பட்டது.
ஆன்லைன்
ஆனால் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டு கூட ஆளுநர் ஆர். என் ரவி இதை டெல்லிக்கு அனுப்பவில்லை. இது மத்திய - மாநில உரிமை தொடர்பான சட்டம் கூட கிடையாது. பொதுமக்களின் உயிர் தொடர்பான சட்டம். ஆனாலும் கூட ஆளுநர் இதை டெல்லிக்கு அனுப்பாமல் வைத்து இருந்தார். இதையடுத்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இதை பற்றி பேட்டி அளித்தார். இந்த மசோதா விவகாரத்தில் தொடக்கத்தில் இருந்து அவர் தீவிரமாக இருந்தார். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அளித்த பேட்டியில், ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை . ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் பெற ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டு உள்ளோம், என்று குறிப்பிட்டார்.
சட்ட மசோதா
இந்த நிலையில்தான் ஆன்லைன் ரம்மி தடை மசோதா தொடர்பாக சில சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டு தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் ரவி கடிதம் எழுதி உள்ளார். இதில் உள்ள சட்டங்கள் தொடர்பாக அவர் விளக்கம் கேட்டு உள்ளார். ஆளுநர் தரப்பிலிருந்து கேட்கப்பட்டு உள்ள கேள்விகளுக்கு இன்று இரவு அல்லது நாளை தமிழ்நாடு அரசு தரப்பில் விளக்கமளிக்கப்படும் என அதிகாரிகள் தரப்பு தகவல் தெரிவித்து உள்ளது. ஆனால் ஆளுநர் கேட்ட விளக்கம் என்னென்ன என்ற விவரங்கள் வெளியாகவில்லை. ரம்மி தடை செய்வது தொடர்பான அவசர சட்டமசோதா நவ 27ம் தேதியுடன் காலாவதியாகிறது. இந்த நிலையில்தான் ஆளுநர் தற்போது விளக்கம் கேட்டுள்ளார்.
விளக்கம்
தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஆன்லைன் ரம்மி காரணமாக நிறைய பேர் தற்கொலைக்கு தள்ளப்படுகின்றனர். முதலில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை வெல்லும் மக்கள், பின்னர் அதில் நிறைய தொகையை வெல்லலாம் என்று நம்பி தங்கள் சேமிப்பு தொகை, வருமானத்தை எல்லாம் இழக்கிறார்கள். இப்படி பணத்தை இழந்த பலர் தமிழ்நாட்டில் தற்கொலையும் செய்து கொண்டுள்ளனர். சென்னையை சேர்ந்த ஐடி ஊழியர், பேராசிரியர் என்று படித்தவர்கள், படிக்காதவர்கள் பலர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டு உள்ளனர்.