பெரியமூவ்.. ஆளுநருக்கு எதிராக நாளை ஜனாதிபதியை சந்திக்கும் திமுக தலைவர்கள்..பரபரக்கும் டெல்லி பின்னணி
சென்னை: தமிழக அரசு தயாரித்து வழங்கிய உரையில் இருந்த விஷயங்களை விட்டு விட்டு ஆளுநர் ஆர்என் ரவி நேற்று சட்டசபையில் படித்த நிலையில் அவருக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். இதையடுத்து ஆளுநர் ஆர்என் ரவி சட்டசபையில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் தான் ஆளுநர் ஆர்என் ரவியை திரும்ப பெற வேண்டும் எனக்கூறி திமுக சார்பில் டெல்லியில் ‛பெரிய மூவ்' ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. அது என்ன? என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த நிலையில் ஆளுநராக ஆர்என் ரவி நியமனம் செய்யப்பட்டார். அதன்பிறகு சிறிது நாட்களிலே தெலங்கானா, கேரளா, டெல்லியை போன்று தமிழ்நாட்டிலும் ஆளுநருக்கும், ஆளும் கட்சிக்கும் இடையே மோதல் போக்கு தொடங்கியது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு திராவிட மாடல் எனவும், திராவிட கொள்கை என பேசி வரும் நிலையில் ஆளுநர் ஆர்என் ரவி அதற்கு எதிராக பேசி வருகிறார். ஆளுநர் ஆர்என் ரவி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் திராவிடத்துக்கு எதிராகவும், சனாதானம் பற்றியும் பேசி வருகிறார். மேலும் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு அனுமதி வழங்காமல் கிடப்பில் போட்டுள்ளார். இதுதான் இருதரப்புக்கும் இடையே சுமூக உறவு இல்லாததற்கு முக்கிய காரணமாகும்.

திரும்பபெற கடிதம்
ஆளுநர் ஆர்என் ரவியின் ஒப்புதலுக்காக ஆன்லைன் ரம்மி சூதாட்ட தடை சட்ட மசோதா உள்பட 10க்கும் அதிகமான மசோதாக்கள் கிடப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் சமீபத்தில் ஆளுநர் ஆர்என் ரவியை திரும்பபெற வேண்டும் என திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்கள் ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு கையெழுத்து கடிதம் அனுப்பி உள்ளனர். அதன்மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.

உரையை விட்டுவிட்டு படித்த ஆளுநர்
இதற்கிடையே தான் சில நாட்களுக்கு முன்பு ‛‛தமிழ்நாட்டை தமிழகம் என சொல்வதே சரியானதாக இருக்கும்'' என ஆர்என் ரவி பேசினார். இது சர்ச்சையை கிளப்பியது. இதற்கு திமுக உள்பட அனைத்து கட்சியினருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து ட்விட்டரில் தமிழ்நாடு எனும் ஹேஷ்டேக் டிரெண்ட் ஆனது. இந்நிலையில் தான் நேற்று ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் துவங்கியது. முதல் சட்டசபை கூட்டத்தொடரில் ஆளுநர் உரையாற்றுவது வழக்கமாகும், மரபாகவும் உள்ளது. அதன்படி நேற்று ஆளுநர் ஆர்என் ரவி தொடக்கி வைக்கும் வரையில் உரையாற்றினார். அப்போது தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்ட அச்சிடப்பட்ட உரையை முழுமையாக படிக்காமல் சில பகுதிகளை விட்டுவிட்டு படித்ததாகவும், உரையில் இல்லாத சில விஷயங்களை சுயமாக சேர்த்து படித்தார்.

பாதியில் வெளியேறிய ஆளுநர்
இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சட்டசபையில் ஆளுநர் ஆர்என் ரவி இருக்கும்போதே முதல்வர் ஸ்டாலின் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். ஆளுநர் ஆர்என் ரவிக்கு வழங்கப்பட்ட அச்சிடப்பட்ட உரையை மட்டும் அவைகுறிப்பில் இடம்பெற செய்ய வேண்டும். அவர் கூறிய பிற விஷயங்களை இடம்பெற செய்யக்கூடாது என தீர்மானம் வாசித்தார். இதுபற்றி அறிந்த ஆளுநர் ஆர்என் ரவி சட்டசபையில் இருந்து பாதியில் வெளியேறினார். தேசியக்கீதம் இசைக்கப்படும் முன்பு அவர் வெளியேறியது தவறானது எனவும், சட்டசபை உரையில் அவரது செயல் கண்டிக்கத்தக்கது எனவும் திமுக உள்பட பல கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழக சட்டசபையில் நடந்த இந்த நிகழ்வு தற்போது பெரும் விவாதத்தை கிளப்பி உள்ளது. மேலும் ஆர்என் ரவிக்கு எதிராக ஒருபுறம் போஸ்டர் ஒட்டப்பட்டு வரும் நிலையில் அவருக்கு ஆதரவாகவும் சிலர் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். இதற்கிடையே தான் ஆளுநர் ஆர்என் ரவி பொங்கல் அழைப்பில் தமிழ்நாட்டின் இலச்சின் இடம்பெறாமல் இந்திய அரசின் இலச்சின் மட்டுமே இடம்பெற்றிருந்தது. இதுவும் விவாதத்தை கிளப்பி உள்ளது. தமிழ்நாட்டில் திமுக மற்றும் ஆளுநர் ஆர்என் ரவிக்கு இடையேயான இந்த மோதல் போக்கு தான் தற்போது ஹாட் டாப்பிக்காக உள்ளது.

ஜனாதிபதியை சந்திக்கும் திமுக
இந்நிலையில் தான் ஆளுநர் ஆர்என் ரவியை திரும்ப பெற வேண்டும் எனக்கூறி திமுக சார்பில் ஜனாதிபதி திரெளபதி முர்முவை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தமிழகத்தில் இருந்து திமுக தலைவர்கள் டெல்லி விரைந்துள்ளனர். திமுக நாடாளுமன்ற எம்பி குழு தலைவர் டிஆர் பாலு தலைமையில் நாளை ஜனாதிபதி திரெளபதி முர்முவை சந்தித்து சட்டசபையில் நடந்த சம்பவங்கள் மற்றும் கிடப்பில் உள்ள மசோதாக்கள் உள்ளிட்டவற்றை திமுக தலைவர்கள் எடுத்து கூற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நாளை சந்திக்க வாய்ப்பு?
இருப்பினும் கூட ஜனாதிபதி திரெளபதி முர்முவை அவர்கள் எந்த நேரத்தில் சந்திக்கின்றனர். யாரெல்லாம் சந்திக்கின்றனர் என்பது பற்றிய விரிவான தகவல் வெளியாகவில்லை. நாளை ஜனாதிபதி மாளிகை நேரம் ஒதுக்கிய பிறகு திமுக தலைவர்கள் திரெளபதி முர்முவை சந்திக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் ஆளுநர் ஆர்என் ரவியை திரும்ப பெற வேண்டும் என திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு கையெழுத்து கடிதம் அனுப்பினர். இது கிடப்பில் உள்ள நிலையில் அடுத்தக்கட்டமாக ஜனாதிபதி திரெளபதி முர்முவை திமுக தலைவர்கள் நேரில் சந்திக்க உள்ளனர்.

தொடரும் பரபரப்பு
இதனால் தமிழகத்தில் ஆளும் திமுக அரசு மற்றும் ஆளுநர் ஆர்என் ரவி இடையேயான பிரச்சனை தொடர்ந்து விஸ்வரூபமாகி வருகிறது. இந்த விஷயத்தில் அடுத்தக்கட்ட நகர்வுகள் அடுத்தடுத்து நடந்து வந்து கொண்டிருப்பதால் இது தற்போது தமிழகத்தில் பெரிய அளவில் பேசும் பொருளாக மாறி தொடர்ந்து பரபரப்பு கூடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications