இனி ஒரு நொடியும் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டில் நீடிக்கக்கூடாது..திருமாவளவன்
சென்னை: திமுக அரசுக்கு எதிராக மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிராக மத்திய அரசு காய் நகர்த்துவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவி இனி ஒரு நொடியும் தமிழ்நாட்டில் நீடிக்கக்கூடாது என்றும் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் இன்றைய தினம் ஆளுநர் உரை வாசித்தார். திமுக அரசு எழுதிக்கொடுத்தவைகளை வாசிக்காமல் சில வார்த்தைகளை விட்டு விட்டார். பெரியார், அண்ணா, காமராஜர், அம்பேத்கர் ஆகியோரின் பெயர்களை குறிப்பிடவில்லை. திராவிட மாடல் அரசு, அமைதிப்பூங்காவாக தமிழகம் திகழ்கிறது என்ற வார்த்தைகளையும் ஆளுநர் வாசிக்கவில்லை.

ஆளுநர் பேசியது சட்டசபை அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. அரசு தயாரித்த உரையே சட்டசபை குறிப்பில் இடம் பெற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் பேசிக்கொண்டிருக்கும் போதே ஆளுநர் அவையை விட்டு வெளியேறியதும் விவாதப்பொருளாகியுள்ளது.
இதனிடையே தேசிய கீதம் இசைக்கும் முன்னரே ஆளுநர் வெளியேறியதும் பேசுபொருளாகியுள்ளது. தேசத்தையே அவமானப்படுத்தி விட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி என்று சபாநாயகர் அப்பாவு உள்ளிட்ட பலரும் தெரிவித்துள்ளனர். ஆளுநர் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று திமுக உள்ளிட்ட பலரும் ஹேஷ்டேக் பதிவிட்டு ட்ரண்ட் ஆக்கி வருகின்றனர்.
இதனிடையே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில், " இந்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே முரண்பாடுகளை உருவாக்கி அரசியல் குழப்பத்தை ஏற்படுத்துவதே ஆளுநரின் நோக்கம். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். ஆளுநரின் போக்குகள் ஏற்கெனவே திட்டமிட்ட ஒன்றுதான். ஆளுநரின் ஆர்எஸ்எஸ் முகம் மீண்டும் அம்பலமாகியுள்ளது.

தேசிய கீதம் இசைப்பதற்கு முன் ஆளுநர் வெளியேறியது அவை மீறல் மட்டுமின்றி தேசிய கீத அவமதிப்பாகும். ஆளுநர் இனியும் பதவியில் நீடிக்க தகுதியில்லை, அவர் பதவி விலக வலியுறுத்தி ஜனவரி 13-ம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய தொல். திருமாவளவள், மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடைவெளியை அதிகப்படுத்த ஆளுநர் முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார். இன்றைய தினம் நடைபெற்றது ஆளுநருக்கும், முதல்வருக்கும் இடையிலான கருத்து மோதல் அல்ல; கருத்தியல் மோதல் என்றார். திமுக அரசுக்கு எதிராக மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிராக மத்திய அரசு காய் நகர்த்துகிறது. ஆளுநர் ஆர்.என்.ரவி இனி ஒரு நொடியும் தமிழ்நாட்டில் நீடிக்கக்கூடாது எனவும் திருமாவளவன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications