தேசிய கல்விக்கொள்கையில் மும்மொழி திணிப்பு! மாநில கல்விக்கொள்கையை ஆளுநர் ஆதரிக்கனும்! பொன்முடி பளீர்
சென்னை: தமிழக அரசின் மாநில கல்விக் கொள்கையை ஆளுநர் ஆர்.என்.ரவி ஆதரிக்க வேண்டும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் மரபுகளுக்கு மாறாக பல்கலைக்கழக நிர்வாகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலையிட்டு, மாணவர்களிடம் அரசியலை புகுத்துவதாக குற்றம்சாட்டி, மதுரை காமராசர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார். இதனைத்தொடர்ந்து நேற்று மதுரை காமராசர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டார்.

பொன்முடி பேட்டி
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அரசியல் பேச தேவையில்லை. அதனை அரசியல் களமாக பயன்படுத்தக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்தேன். ஆனால் புதிய கல்விக் கொள்கையை பற்றி பேசியுள்ளனர்.
புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு எதிர்த்து வருகிறது. இதற்கு மாற்றாக மாநில கல்விக் கொள்கையை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், மாணவர்களிடம் சென்று புதிய கல்விக் கொள்கையை பற்றி பேச வேண்டிய தேவை இல்லை. ஆளுநர் என்பவர் மாநில அரசு எடுக்கும் முடிவை செயல்படுத்த வேண்டும்.

புதியக் கல்வி கொள்கை
அதிலும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசும்போது, தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் எனக்கு தெரிந்து, மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையில் மும்மொழி திட்டமே உள்ளது. அதிலும் இந்தி மொழிக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நான் முதல்வன் திட்டத்தில், மாணவர்கள் வேலை செய்பவர்களாக இல்லாமல், வேலை கொடுப்பவர்களாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அதை தான் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசினார். அதற்காக நான் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
ஆனால் தமிழ் மொழியை வளர்ப்பது மத்திய அரசு என்று பேசியது தவறான கூற்று. தமிழ்வழியில் படிக்க வேண்டும் என்பதை கொண்டு வந்தது திமுக அரசு தான்.தமிழ் மொழியை அனைவரும் படிக்க வேண்டும் என்பதற்கான ஏற்பாடுகளை செய்தவர் கருணாநிதி தான்.

மாநில கல்விக் கொள்கை
திராவிடம் என்பது ஆங்கிலேயர்கள் கொண்டு வந்தது அல்ல. அது பழம்பெரும் நாகரிகம். அதேபோல் ஆளுநர் ஆர்.என்.ரவி மாநில கல்விக் கொள்கையை ஆதரிக்க வேண்டும். அதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபட வேண்டும். ஏதேனும் மாற்றம் தேவை என்றால் அவரும் கல்விக் குழுவினரிடம் வலியுறுத்தலாம்.

அண்ணாமலை மீது விமர்சனம்
அண்ணாமலை அரசியலமைப்பு பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். மாநிலத்தின் ஆளுநர் எப்படி இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மாநில அமைச்சரவையில் என்ன தீர்மானம் நிறைவேற்றப்படுகிறதோ, அதனை நிறைவேற்றுகிறார்களோ என்று பார்ப்பது தான் ஆளுநர் பணி. மாநில அரசின் செயல்பாடுகளை பார்ப்பதற்காக தான் ஆளுநர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
Recommended Video

சிபிஎஸ்இ முடிவு
சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் தாமதமாவது மாணவர்களுக்கும், பெற்றோருக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை மட்டும் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான பிறகு நடைபெறும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications