த்ரிஷா குறித்து ஆபாச பேச்சு! சிக்கலில் மன்சூர் அலிகான்.. ஆளுநர் தமிழிசை சொன்னதை கவனிச்சீங்களா
சென்னை: நடிகை த்ரிஷா குறித்து அருவருக்கத்தக்க வகையில் நடிகர் மன்சூர் அலிகான் பேசியிருப்பது பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து புதுச்சேரி துணை நிலை ஆளுநரும், தெலங்கானா ஆளுநருமாகிய தமிழிசை சௌந்தரராஜன் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
லியோ திரைப்படம் வெளியானதிலிருந்து மன்சூர் அலிகான் குறித்த விவாதங்கள் அடிக்கடி எழுந்து வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் வீடியோ ஒன்று வெளியாகியிருந்தது. அதில் த்ரிஷா குறித்து அவர் பேசியிருந்த கருத்துக்கள் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளன. அவரது பேச்சுக்கள் அருவருக்கத்தக்கதாக இருப்பதாக கூறியுள்ள த்ரிஷா, இவரை போன்றவர்களால்தான் மனித குலத்துக்கே அவப்பெயர் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து x சோஷியல் மீடியாவில் த்ரிஷா பதிவிட்டுள்ளதாவது, "நடிகர் மன்சூர் அலிகான் என்னை பற்றி அருவருக்கத்தக்க வகையில் பேசிய வீடியோவை பார்த்தேன். பாலியல் ரீதியாகவும், மரியாதைக்குறைவாக மற்றும் கேவலமான எண்ணத்துடன் பேசியதை வன்மையாக கண்டிக்கிறேன். என்னுடன் நடிக்க வேண்டும் என்று அவர் தொடர்ந்து ஆசைப்படலாம். இதுவரை அவருடன் சேர்ந்து நடித்ததில்லை என்பதில் நிம்மதியடைகிறேன். இனியும் சேர்ந்து நடிக்கமாட்டேன். இவரைப்போன்றவர்கள் மனிதக்குலத்திற்கே அவப்பெயரை ஏற்படுத்துகிறார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல அரசியல் தளத்திலும் மன்சூர் அலிகானுக்கு எதிராக குரல்கள் எழுந்து வருகின்றன. பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறுகையில், "நடிகை த்ரிஷா குறித்து பேட்டி ஒன்றில் மன்சூர் அலிகான் அருவருக்கத்தக்க வகையில் பேசியிருக்கிறார். சுயவிளம்பரத்திற்காக இது போன்று செயல்படும் நபர்களை வன்மையாக கண்டிக்கிறேன்.த்ரிஷா குறித்து இழிவாக பேசிய மன்சூர் அலிகான் மீது காவல் துறை தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல இந்த விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என அதன் உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு கூறியுள்ளார். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து புதுச்சேரி துணை நிலை ஆளுநரும், தெலங்கானா ஆளுநருமாகிய தமிழிசை சௌந்தரராஜன் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். பெண்களை பற்றி யார் தவறாக பேசினாலும் அதற்கு கண்டனம் தெரிவிப்பேன் என்று அவர் கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் திரையுலகினரும், அரசியல் கட்சிகளும் த்ரிஷாவுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள நிலையில், மன்சூர் அலிகான் விளக்கமளித்துள்ளார். ஆனால் அதிலும் அவர் அலட்சியமாக பதிலளித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications