மகளிர் உரிமை தொகை.. இது லிஸ்ட்லயே இல்லையே.. புதிய ரேஷன் கார்டு கேட்போருக்கு பறந்த அறிவுறுத்தல்
சென்னை: புதிய ரேஷன் கார்டு வழங்குவது பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்க பழைய ரேஷன் கார்டிலிருந்து பெயரை நீக்க அவசரப்பட வேண்டாம் என்று அதிகாரிகள் அறிவுரை கூறி வருகிறார்கள்.
தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்களில் பொது விநியோக திட்டம் மூலம் பொதுமக்களுக்கு விலையில்லா அரிசி, மானிய விலையில் பருப்பு, பாமாயில்,கோதுமை, சர்க்கரை ஆகியவை வழங்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் சுமார் 2 கோடிக்கும் அதிகமான ஸ்மார்ட் கார்டுகள் இருக்கின்றன. பொருளாதார அடிப்படையில் AAY, PHH, NPHH, NPHHS, NPHHN என 5 வகை குறியீடுகளுடன் குடும்ப அட்டைகள் வழங்கப்படுகிறது.

புதிதாக விண்ணப்பித்தோருக்கு ரேஷன் கார்டு கடந்த 2022ம் ஆண்டு வரை தமிழக அரசு வழங்கி வந்தது. மாவட்டம் விட்டு மாவட்டம் இடம் பெயர்ந்தவர்கள் தற்போது குடியிருந்து வரும் முகவரியில் புதிய ரேஷன் கார்டு நகல் அட்டையை ரூ.25 செலுத்தி பெற்று வந்தார்கள். ரேஷன் அட்டையை தொலைத்தவர்களும் நகல் அட்டைக்கு உரிய கட்டணம் செலுத்தி பெற்று வந்தார்கள்.
இந்நிலையில தமிழகத்தில் உள்ள குடும்ப தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகையாக மாதம் 1000 ரூபாய் அரசு வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் இந்த திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட போவதாக தமிழக அரசு கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவித்தது. அப்போது முதலே ஏராளமானோர் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்து வருகிறார்கள். இதுவரை லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் கடந்த ஓராண்டாக ரேஷன் கார்டுகள் புதிதாக யாருக்கும் வழங்கப்படவில்லை.
இதுபற்றி அமைச்சர் பெரிய கருப்பன் அண்மையில் கூறுகையில், "கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்காக பலர் புதிதாக குடும்ப அட்டைகளுக்கு விண்ணப்பித்தார்கள். ஆகவே, குறிப்பிட்ட காலத்துக்கு குடும்ப அட்டை விநியோகத்தை நிறுத்திவைக்க முடிவெடுக்கப்பட்டது. எனவே, சில ஆய்வுகள் மேற்கொண்ட பிறகு அதன் அவசியம் கருதி குடும்ப அட்டைகள் விரைவில் வழங்கப்படும்" என்று கூறியிருந்தார்.
இதனிடையே திருமணமானவர்கள், தனிக்குடித்தனம் செல்பவர்கள் புதிய கார்டுக்கு விண்ணப்பித்தவர் பலருடைய விண்ணப்பங்கள் அனுமதிக்கப்பட்டும் புதிய கார்டுகள் கடந்த ஓராண்டாக தமிழகம் முழுவதும் கிடைக்கவில்லை. இதன் காரணமாக இவர்கள் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாமலும், வேறு சான்றிதழ் போன்றவற்றிற்கு விண்ணப்பிக்க முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்து..
இது ஒருபுறம் எனில் தமிழகம் முழுவதும் புதிய கார்டுகள் கிடைக்க தாமதமாகும் என்று தெரிந்தும் பலரும் ஆர்வமாக புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து வருகிறார்கள். இதற்காக ரேஷன் கார்டிலிருந்து பெயர் நீக்க கோரிக்கைகள் தமிழகம் முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனிடையே நீண்ட நாட்களாக விண்ணப்பித்தும் புது கார்டு வராததால் மீண்டும் பழைய கார்டில் பெயரை சேர்க்கின்றனர். இதனால் நேரில் வரும் பெயர் நீக்க கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் தொடர்ந்து அறிவுரை கூறி அனுப்பி வருகிறார்கள். புதிய கார்டு வழங்கத் துவங்கிய பின்னர் பெயர்களை நீக்கி புதிய கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் என அதிகாரிகள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications