"தோட்டத்துக்கு அகிரா வந்தான்.. சாப்பிட்டீங்களான்னு கேட்டான்.. அப்படியே எனக்கு".. ராமதாஸ் எமோஷனல்
கொள்ளுப்பேரன் குறித்து டாக்டர் ராமதாஸ் ட்வீட் பதிவிட்டுள்ளார்
சென்னை: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தன்னுடைய கொள்ளுப்பேரன் குறித்து ட்வீட் ஒன்றினை நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
அன்புமணி சௌமியா தம்பதிக்கு மூன்று மகள்கள் இருக்கிறார்கள். இயல்பாகவே குடும்பத்தின் மீதும் தொண்டர்கள் மீதும் அதீத பாசம் வைத்துள்ளவர் அன்புமணி... இதில் மூத்த மகள் சம்யுக்தாவுக்கும், அன்புமணியின் சகோதரியின் மகன் ப்ரித்தீவனுக்கும் கடந்த 2014-ல் திருமணம் நடந்தது..
இந்நிலையில் கடந்த 2018-ல் சில காலம் திடீரென அன்புமணி தாடியுடன் காணப்பட்டார்.. எப்போதும் ஸ்மார்ட் லுக்குடனும் மழ மழ முகத்துடனும் ஜம்மென்று இருக்கும் அன்புமணியின் தாடியின் ரகசியம் என்னவாக இருக்கும் என்ற ஆர்வம் அப்போது எழுந்தது..

தாடியின் ரகசியம்
அதனால், தாடியின் ரகசியம் என்ன என்று செய்தியாளர்கள் நேரிடையாகவே அன்புமணியை அப்போது கேட்டுவிட்டனர்... அதற்கு அன்புமணி, "மகள் சம்யுக்தா கர்ப்பமாக இருக்கிறார்.. விரைவில் குழந்தை பிறக்கப்போகிறது. நல்லபடியாக என் மகளுக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக குல தெய்வத்திடம் வேண்டிக்கொண்டு தாடி வளர்க்கிறேன்" என்று சொன்னதாக ஊடகங்களும் அப்போது செய்திகளை வெளியிட்டன.

பிரசவம்
இதையடுத்து அடுத்த சில நாட்களில் அன்புமணியின் மகளுக்கு சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் பிரசவம் நடந்து, ஆண், பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தன.. இதையடுத்து அன்புமணி தாத்தாவாகவும், டாக்டர் ராமதாஸ் கொள்ளு தாத்தாவாகவும் புரமோஷன் பெற்றார்கள்.. தைலாபுர தோட்டமே மகிழ்ச்சியில் திளைத்தது.. தன்னுடைய கொள்ளு பேர பிள்ளைகளுடன் பொழுதை கழிப்பதில் டாக்டர் ராமதாசுக்கு அலாதிபிரியம்.

கொள்ளுப்பேர பிள்ளைகள்
சில சமயம், தனக்கிருக்கும் ஆசைகள் அனைத்தையும் சின்ன சின்ன ஆசை என்ற தலைப்பில் மனம் திறந்து முகநூல் பதிவுகளில் தெரியப்படுத்துவார்.. இப்படித்தான் ஒருமுறை, கொள்ளுபேரப் பிள்ளைகளை வைத்து ஒரு பாட்டு எழுதினார் ராமதாஸ்.. அதில், "என்ன இந்த பூமி? என்பதையறிய எனது கொள்ளுப்பேரன், பேத்திகளுடன் சுற்றி வர ஆசை.. வீட்டுக்குள் நடக்கும் ஓட்டப்பந்தயத்தில் அவர்களை முந்தும் வேகத்தில் ஓடி, அவர்களிடமே கைத்தட்டல் வாங்க ஆசை... எனக்கிருக்கும் கொள்ளுப்பேரன், பேத்திகள் நால்வருடன் சேர்ந்து ஐந்தாவதாக நானும் ஒரு குழந்தையாக மாறி குதூகலிக்க ஆசை" என்று பாட்டுக்களை எழுதி தானும் ஒரு குழந்தையாகவே மாறிப்போவார் ராமதாஸ்.

சாப்பிட்டீங்களா தாத்தா
இந்நிலையில், ஒரு ட்வீட் போட்டுள்ளார்.. அதில், "எனது மூன்றரை வயது கொள்ளுப் பெயரன் அகிரா இன்று சென்னையிலிருந்து தைலாபுரம் தோட்டத்திற்கு வந்தான்... என்னருகே வந்ததும்,'' சாப்பிட்டீங்களா தாத்தா?'' என்று கேட்டான். மெய்சிலிர்த்துப் போனேன். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!" என்று பதிவிட்டுள்ளார்.. இந்த ட்வீட்டை பார்த்ததும் ட்விட்டர்வாசிகள் திரண்டு வந்து ராமதாசுக்கு வாழ்த்துக்களை சொல்லி கொண்டிருக்கிறார்கள்.. மேலும் சிலர், "அகிரா என்பது தமிழ் பெயரா ஐயா?" என்று சந்தேகங்களை எழுப்பி கொண்டிருக்கிறார்கள்.. ஆனால், அகிராவுடன் தோட்டத்தில் இப்போது செம பிஸியாக இருக்கிறார் டாக்டர்..!












Click it and Unblock the Notifications