குரூப்2 தேர்வு..தமிழ் தகுதி தேர்வில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு..உயர் நீதிமன்றம் தீர்ப்பு
குரூப் 2 தேர்வில் பங்கேற்கும் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழ் தகுதி தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் என டிஎன்பிஎஸ்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: இன்று நடைபெறும் குரூப் 2 தேர்வில் பங்கேற்கும் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழ் தகுதி தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் என டி.என்.பி.எஸ்.சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி எனப்படும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு ஆணையம் நிரப்பி வருகிறது. அந்த வகையில், குரூப்-2, 2 ஏ பதவிகளில் வரும் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், உதவி ஆய்வாளர், சிறப்பு உதவியாளர், தனிப்பிரிவு உதவியாளர்கள் உள்பட 5,446 பணியிடங்களுக்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டது.
இந்த பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு மே மாதம் 21-ந்தேதி நடத்தப்பட்டு தேர்வு முடிவு வெளியானது. முதல்நிலைத் தேர்வை 9, 94, 890 பேர் எழுதியதில், 57, 641 பேர் தேர்ச்சி பெற்றனர். முதல் நிலை தேர்வை எழுதியவர்கள் அடுத்ததாக முதன்மை தேர்வு எழுத வேண்டும். இந்த முதன்மை தேர்வு இன்று நடைபெற உள்ளது.

இந்த நிலையில், இன்று நடைபெறும் குரூப் 2 தேர்வில் பங்கேற்கும் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழ் தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அகில இந்திய பார்வை மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு வழக்கு தொடர்ந்தது. பார்வை மாற்றுத்திறனாளிகள் தமிழ் தகுதி தேர்வு எழுதுவதில் இருந்து ஏற்கனவே விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழ் தகுதி தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications