குரூப் 4 தேர்வு ரத்தாகுமா? சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த டிஎன்பிஎஸ்சி.. ரிசல்ட் எப்போது?
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் குளறுபடிகள் ஏற்பட்டு இருப்பதாகவும் தேர்வை ரத்து செய்துவிட்டு மறு தேர்வு நடத்த வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் கூறியிருந்தார். இந்த நிலையில்தான், குரூப் 4 தேர்வில் குளறுபடிகள் ஏதும் இல்லை எனவும் குரூப் 4 தேர்வு முடிவுகள் 3 மாதங்களில் வெளியாகும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு பணி கனவுடன் காத்திருக்கும் பல லட்சக்கணக்கான தேர்வர்கள் குரூப் 4 தேர்வை எழுதுகிறார்கள். இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு கடந்த 12 ஆம் தேதி நடைபெற்றது. சுமார் 3,935 பணியிடங்களுக்கு நடைபெற்ற இந்த தேர்வை 11 லட்சத்து 48 ஆயிரத்து 19 பேர் எழுதி இருந்தனர். குரூப் 4 தேர்வில் பாடத்திட்டத்திற்கு வெளியே இருந்து அதிக அளவில் கேள்விகள் இடம் பெற்றதாக தேர்வர்கள் மத்தியில் புகார் எழுந்தது.

குரூப் 4 தேர்வர்களின் விடைத்தாள்கள்
இந்த நிலையில், தேர்வு முடிந்த பிறகு தேர்வர்களின் விடைத்தாள்கள் போதிய பாதுகாப்பு இன்றி அட்டை பெட்டியில் எடுத்து செல்லப்பட்டதாகவும், அந்த பெட்டிகள் முறையாக சீலிடப்படாமல் பாதுகாப்பற்ற நிலையில் இருந்ததாகவும் சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல் ஆகின.
இந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி தலைவர் பிராபகர் இது தொடர்பாக விளக்கம் அளித்தார். பிரபாகர் கூறுகையில், 'விடைத்தாள்கள் அனைத்தும் சாதாரண அட்டை பெட்டிகளில் கொண்டு செல்லப்படுவது இல்லை. சீலிடப்பட்ட 'டிரங்க்' பெட்டிகளில் கொண்டு செல்லப்படும். அந்த வகையில் அந்த பெட்டிகள் பாதுகாப்பாக கடந்த 14 ஆம் தேதியே சென்னைக்கு வந்தடைந்துவிட்டது.
அட்டைப் பெட்டியில் என்ன மாதிரியான ஆவணங்கள் கொண்டு வரப்பட்டது? என்பது குறித்து விசாரிக்கப்படும்' என்றார். முன்னதாக, குரூப் 4 தேர்வு வினாத்தாளை மதுரையில் தனியார் பேருந்து ஒன்றில் பேப்பரில் சீல் வைத்து எடுத்து செல்லப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இதற்கு டிஎன்பிஎஸ்சி அப்போதே விளக்கம் கொடுத்து இருந்தது. அந்த விவகாரம் தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியரை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யவும் கேட்டிருந்தது.
குளறுபடிகள் எதுவும் இல்லை
அதன்படி, கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்திருப்பதாக டிஎன்பிஎஸ்சி கூறியிருந்தது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் குளறுபடிகள் ஏற்பட்டு இருப்பதாகவும் தேர்வை ரத்து செய்துவிட்டு மறு தேர்வு நடத்த வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் கூறியிருந்தார். இந்த நிலையில்தான், குரூப் 4 தேர்வில் குளறுபடிகள் ஏதும் இல்லை எனவும் குரூப் 4 தேர்வு முடிவுகள் 3 மாதங்களில் வெளியாகும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண் 07:2025 நாள் 25.04.2025-இன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-IV (தொகுதி - IV) -க்கான தேர்வுகள் கடந்த 12.07.2025-இல் மாநிலம் முழுவதிலும் 4,922 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இதில் 13,89,238 விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்ததில் 1148,019 விண்ணப்பதாரர்கள் தேர்வினை எழுதினர்.
தேர்வுகள் முடிந்து அனைத்து விடைத்தாள்களும் உரிய பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி இரும்புப்பெட்டிகளில் (Stainless Steel Boxes) தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அலுவலகத்திற்கு சீலிடப்பட்ட 13.072025 காலை வரை பாதுகாப்பாக வரப்பெற்றுள்ளன. குளறுபடிகளும் நிகழவில்லை. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் கடந்த 12.07.2025 முப அன்று நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு IV (தொகுதி - IV) தேர்வு தொடர்பான விடைத்தாள்கள் முறையாக சீலிடப்படாமல் அட்டைப்பெட்டிகளில் இருந்தது என பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் இன்று செய்திகள் வந்துள்ளன.
சிசிடிவி கேமராவில் கண்காணிக்கப்படுகிறது
சேலம் மாவட்ட விடைத்தாள்களும் சீலிடப்பட்ட இரும்புப்பெட்டிகளில் (Stainless Steel Boxes) தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அலுவலகத்திற்கு 13.07.2025 அதிகாலை பாதுகாப்பாக வரப்பெற்றுள்ளன. விடைத்தாள்கள் அட்டைப்பெட்டிகளில் கொண்டுவரப்பட்டன என்ற செய்திகளில் உண்மை இல்லை.
OMR விடைத்தாள்கள் அனைத்தும் இரும்புப்பெட்டிகளில் (Stainless Steel Boxes) வைத்து சீலிடப்பட்டு அவை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அலுவலகத்திற்கு வந்து சேரும் வரை 24x7 முறையில் நேரலையாக கண்காணிக்கப்பட்டு அவற்றின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டு CCTV Camera மூலமாகவும் கண்காணிக்கப்படுகிறது. எந்த ஒரு விடைத்தாளும் செய்தி ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டவாறு அட்டைப் பெட்டிகளில் கொண்டு வரப்படுவது இல்லை.
அனைத்தும் ஆதாரமற்றவையாகும்
பத்திரிகைச் செய்திகளில் கொடுக்கப்பட்டுள்ள புகைப்படங்கள். காலி பயன்படுத்தப்பட்ட அட்டைப்பெட்டிகள் மற்றும் தேர்வுக்கு உபயோகப்படுத்தப்பட்ட பின்னர் உபரியாக இருந்த வினாத்தாள்கள் அடங்கிய அட்டைப் பெட்டிகள் போன்றவையாகும் இவை தேர்வில் பயன்பட்டது போக மீதமிருந்த வினாத்தாள்கள் என்பதால் வழக்கமான நடைமுறையின்படி அந்தந்த மாவட்டங்களிலேயே வைக்கப்பட்டிருக்கும்.
தேர்வு நடைமுறைகள் முடிந்த பின்னர் இவை மாவட்ட கருவூலகங்கள் மூலமாக மாவட்ட மைய நூலகங்கள் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.
இது குறித்து தேர்வாணையம் ஏற்கனவே விரிவான நடைமுறையினை வெளியிட்டு பின்பற்றி வருகிறது.
எனவே. 1207,2025 மு.ப அன்று நடந்து முடிந்த ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு IV (தொகுதி IV) தேர்வு தொடர்பான விடைத்தாள்கள் முறையாக சீலிடப்படாமல் அட்டைப்பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்தன என்று வரும் பத்திரிகை மற்றும் இதர ஊடக செய்திகள் அனைத்தும் ஆதாரமற்றவையாகும்.தேர்வாணையத்தால் தெரிவித்தபடி இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் மூன்று மாத காலத்திற்குள் வெளியிடப்படும்" என்று தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications