5 வயது குழந்தையின் கைப்பையில் இந்தப் பொருளா? சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு
சென்னை விமான நிலையத்தில் 5 வயது குழந்தை வைத்திருந்த கைப்பையை சோதித்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
சென்னை விமான நிலையத்துக்கு நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் பயணிகளை சோதிப்பதற்காக சிஐஎஸ்எப் துணை ராணுவப் படையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். பயணிகள் எவரேனும் போதைப்பொருட்களை வைத்துள்ளனரா அல்லது ஆயுதங்களை கொண்டு வருகின்றனரா என அவர்கள் சோதனை செய்வது வழக்கம். விமான நிலையங்களில் பொதுவாக துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இஸ்ரேலில் இருந்து இன்று மதியம் சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்துள்ளது. அதில் இருந்து இறங்கிய பயணிகளில் ஒரு குடும்பத்தினர் பெங்களூரு செல்வதற்காக உள்நாட்டு முனையத்துக்கு வந்துள்ளனர். அப்போது அவர்களை அங்கிருந்த சிஐஎஸ்எப் அதிகாரிகள் அவர்களை சோதனை செய்துள்ளனர். இதில் அவர்களுடன் வந்திருந்த 5 வயது குழந்தை வைத்திருந்த கைப்பையை சோதனை செய்த போது வெடிகுண்டு கண்டறியும் கருவி அலாரம் எழுப்பியுள்ளது. இதனால் உஷரான அதிகாரிகள் அந்தக் கைப்பையை சோதனை செய்து பார்த்ததில் அதிர்ச்சியில் உறைந்தனர். ஏனெனில் அந்தக் கைப்பையில் வெடிக்காத துப்பாக்கி குண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அந்த துப்பாக்கி குண்டை பாதுகாப்புப் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அந்தக் குடும்பத்தினர் கர்நாடகாவை சேர்ந்தவர்கள் என்பதும்,
இஸ்லேலுக்கு சுற்றுலா சென்று வந்ததும் தெரியவந்தது. வெடிக்காத துப்பாக்கிகுண்டு குழந்தையின் கைப்பையில் எப்படி வந்தது, அது யாருடையது என அந்தக் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.