"அதுக்கு" மட்டும் வாய்ப்பே இல்லங்க.. எச்.ராஜாவிற்கு எதிராக குதித்த சந்திரன்.. பரபரத்த "பண்ணை வீடு"!
காரைக்குடி: தமிழ்நாடு பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜாவிற்கு எதிராக பாஜக நிர்வாகிகள் பலர் தீவிரமாக களமாட தொடங்கி உள்ளனர். முக்கியமாக காரைக்குடி நிர்வாகிகள் பலர் எச். ராஜாவை கடுமையாக எதிர்த்து பேசி வருகிறது.
பாஜாகவின் தேசிய தலைமை தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட பாஜக நிர்வாகிகளுக்கு தேர்தல் செலவிற்காக குறிப்பிட்ட தொகையை நிதியாக கொடுத்தது. ஒவ்வொரு வேட்பாளருக்கும் 13 கோடி ரூபாய் வரை தேர்தல் செலவிற்காக ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த தகவலை பாஜக நிர்வாகிகளே வெளிப்படையாக ஊடகங்களில் போட்டு உடைத்து வரும் நிலையில், காரைக்குடி நிர்வாகிகள் பலர் எச். ராஜாவை விமர்சனம் செய்து வருகிறார்கள். இந்த தேர்தல் நிதியில் எச். ராஜா முறைகேடு செய்துவிட்டதாக கூறி உள்ளனர்.

என்ன
அதன்படி தேர்தலுக்கு செலவிற்காக கொடுத்த நிதியை எச். ராஜா முறையாக செலவு செய்யவில்லை. மாறாக அவர் தனது சொந்த கணக்கிற்கு பணத்தை மாற்றிவிட்டார். இதை வைத்து காரைக்குடியில் 4 கோடி ரூபாய்க்கு சொகுசு பாங்களா கட்டி வருகிறார் என்றும் புகார் வைத்துள்ளனர். இதையடுத்து ராஜாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மொத்தமாக காரைக்குடி பாஜக நிர்வாகிகள் பலர் கூண்டோடு ராஜினாமா செய்தனர்.

விசாரணை 1
இந்த சம்பவம் பாஜகவின் தேசிய தலைமை வரை சென்று பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பாஜகவின் தேசிய தலைமை இது குறித்து சில மூத்த நிர்வாகிகள் மூலம் விசாரணை நடத்தி இருக்கிறது. இதில் நிர்வாகிகள் சரியாக தேர்தல் பணி செய்யாததே தோல்விக்கு காரணம் என்று எச். ராஜா விளக்கம் கொடுத்ததாக கூறப்படுகிறது. நிர்வாகிகள்தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம் என்று அவர் விளக்கியதாக கூறப்படுகிறது.

விசாரணை 2
இன்னொரு பக்கம் தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகனும் இதை பற்றி விசாரித்து வருகிறார். யார் தவறு செய்திருந்தாலும் விசாரிக்க வேண்டியது என்னுடைய கடமை என்று முருகன் வெளிப்படையாக அறிவித்துவிட்டார். இதனால் இந்த 4 கோடி ரூபாய் விஷயம் உண்மையா என்று அவர் விசாரித்துக் கொண்டு இருக்கிறார்.

விரும்பவில்லை
இதில் காரைக்குடி மண்டல் தலைவர் சந்திரன் எச்.ராஜாவிற்கு எதிராக வைத்த மோசடி புகார்கள் குறித்து விசாரிக்கப்பட்டது. இந்த விசாரணையின் முடிவில் காரைக்குடி மண்டல் தலைவர் சந்திரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு நெருக்கமான சிலரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். தேர்தல் செலவு பிரச்னையை பொதுவில் சந்திரன் கொண்டு வந்ததை தலைமை விரும்பவில்லை என்பதால் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

குதித்தார்
இந்த நிலையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட காரணத்தால் தற்போது சந்திரன் நேரடியாக எச். ராஜாவிற்கு எதிராக கடும் விமர்சனங்களை வைக்க தொடங்கி உள்ளார். அதன்படி, 4 கோடி ரூபாய்க்கு எச். ராஜா பண்ணை வீடு கட்டுகிறார். 40 ஏக்கருக்கு அதிகமான நிலத்தில் அவர் வீடு கட்டுகிறார். எச். ராஜா இருக்கும் வரை தமிழ்நாட்டில் தாமரை மலர வாய்ப்பே இல்லை.

முடியாது
தேர்தல் வெற்றிக்கும் அவருக்கும் ரொம்ப தூரம். அவருக்கு தேர்தல் வெற்றி மட்டும் வாய்ப்பே கிடையாது. அவரால் வார்டு தேர்தலில் நின்றால் கூட வெற்றிபெற முடியாது. தேர்தல் செலவு குறித்து முறையாக விசாரணை நடத்த வேண்டும். எவ்வளவு பணம் இதில் மோசடி செய்யப்பட்டது என்று உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications