விவசாயிகளுக்கு மகிழ்ச்சி.. தமிழக அரசு சர்ப்ரைஸ்ஸை பாருங்க.. சொன்னதை செய்த முதல்வர் ஸ்டாலின்.. சபாஷ்
சென்னை: குறுவை சாகுபடியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு சர்ப்ரைஸ் தந்துள்ளது.. இதுகுறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது.
காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை பயிர் சாகுபடி செய்வதற்காக, கடந்த வருடம் ஜுன் 12-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை தமிழக அரசு திறந்தது.

நீர்நிலைகள்: ஆனால், தென்மேற்கு பருவமழை குறைந்ததாலும், கர்நாடக அணைகளில் இருந்து எதிர்பார்த்த அளவுக்கு தண்ணீர் திறக்கப்படாததாலும் மற்றும் பெரும்பாலான பகுதிகளில் நீர்நிலைகளையும், வரத்து கால்வாய்களையும் தூர்வாரும் பணிகள் முழுமை அடையாததாலும் குறுவைப் பயிர்களுக்கு தேவையான தண்ணீர் கிடைக்கவில்லை. முக்கியமாக கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடையாததால், குறுவை பயிர் சாகுபடி பாதிக்கப்பட்டது.
5 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பில் குறுவை நெற்பயிர்கள் பயிரிடப்பட்டிருந்த நிலையில், சுமார் 3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மட்டுமே அறுவடை நடைபெற்றதாகவும், மீதமுள்ள 2 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்களை காப்பாற்றுவதற்கு வழியே இல்லாமல் போனதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்திருந்தனர்..
விவசாயிகள்: இதையடுத்து, காவிரி பாசன மாவட்டங்களில் தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்ட குறுவை பயிர் சாகுபடி குறித்து கணக்கெடுப்பு நடத்தி இழப்பீடு வழங்க முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500 இழப்பீடாக வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இந்த அறிவிப்பானது விவசாயிகளுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், அணையில் இருந்து போதுமான நீா் திறப்பு இல்லாததால் பாதிக்கப்பட்ட 22,533 விவசாயிகளுக்கு ரூ. 16.85 கோடி இழப்பீடு வழங்க தற்போது தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது, ஹெக்டேருக்கு ரூ.13,500 என்ற அளவில் நிவாரண நிதி அளிக்கப்பட உள்ளது. இதற்கான உத்தரவை வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை செயலா் வெ.ராஜாராமன் பிறப்பித்துள்ளார்.
மழைப்பொழிவு: அவரது உத்தரவில் உள்ளதாவது: "பாசனத்துக்காக மேட்டூா் அணையில் இருந்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம் நீா் திறக்கப்பட்டது. கா்நாடகத்தில் மழைப் பொழிவு குறைந்ததால், மேட்டூருக்கு வரும் நீரின் அளவு குறைந்தது.
இதனால், தமிழகத்தில் குறுவை பயிா் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூா், தஞ்சாவூா் ஆகிய மாவட்டங்களில் 33 சதவீதத்துக்கும் மேல் பயிா் சாகுபடி பாதிப்பால் 22,533 விவசாயிகள் இழப்பைச் சந்தித்துள்ளனா்.
மகிழ்ச்சி: முன்னதாக, இது குறித்த கள ஆய்வுகள் வேளாண்மைத் துறை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, 12,483 ஹெக்டேர் அளவுக்கு பயிா் பாதிப்புகளை சந்தித்த 22,533 விவசாயிகளுக்கு தேசிய பேரிடா் மேலாண்மை நிதியத்தில் இருந்து இழப்பீடாக ரூ.16.85 கோடி வழங்கப்படும்.
அதாவது, ஹெக்டேருக்கு ரூ. 13,500 என்ற அளவில் நிவாரண நிதி அளிக்கப்பட உள்ளது" என்று கூறியுள்ளார். தமிழக அரசின் இந்த நடவடிக்கையானது, விவசாயிகளுக்கு மிகுந்த நம்பிக்கையையும், மகிழ்வையும் தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications