இன்று பத்திரப்பதிவு கிடையாதா? ஹார்ட்வேர் பிரச்சனையால் சிக்கல்.. மாற்று தேதியில் வைக்க அறிவுரை
சென்னை: பத்திரப்பதிவு துறை தகவல்களை சேமிக்கும் ஹார்ட்வேரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக இதனை சரிசெய்யும் பணி நடந்து வருகிறது. ஆனால் இன்னும் தொழில்நுட்ப கோளாறை சரிசெய்ய முடியவில்லை. இதனால் மாற்று தேதியில் பத்திரப்பதிவை வைத்து கொள்ளும்படி பத்திரப்பதிவு துறை தலைவர் அறிவுரை வழங்கி உள்ளார்.
தமிழகத்தில் தொடர்ந்து பத்திரப்பதிவு துறை மேம்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது பத்திரப்பதிவுத்துறை கணினிமயமாக்க்பபட்டுள்ளது. அனைத்து சேவைகளும் ஆன்லைனில் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி நிலம், வீடு, அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட அசையா சொத்துகளை வாங்கும் போதும் விற்கும் போதும் பத்திரப் பதிவை ஆன்லைனில் செய்து கொள்ளும் வசதி உள்ளது. இதற்கென பிரத்யேகமாக பதிவுத்துறைக்கு இணையதளம் உள்ளது.
இந்த இணையதளம் வாயிலாக வேலை நாட்களில் தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவுகள் நடந்து வருகின்றன. மேலும் அடிக்கடி இந்த இணையதளம் முடங்கி வருகிறது. இதனால் பொதுமக்கள் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே தான் தற்போது பத்திரப்பதிவு துறை தகவல்களை சேமிக்கும் ஹார்ட்வேரில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
கடந்த 2ம் தேதி ஏற்பட்ட பிரச்சனையை சரிசெய்யும் பணி நடந்து வந்தது. ஆனால் இன்னும் சரியாகவில்லை. இந்நிலையில் தான் நாளை பத்திரப்பதிவு இருக்குமா? இருக்காதா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் பொதுமக்களுக்கு முக்கிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக பத்திரப்பதிவுத் துறை தலைவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
‛‛பத்திரப்பதிவுத் துறை தகவல்களை சேமிக்கும் வன்பொருளில் (Hardware) சனிக்கிழமை தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இந்த பிரச்சனையை சரிசெய்யும் பணிகள் நடந்து வந்தது. இரு நாட்களாக அனைத்து முயற்சிகளும் துரிதமாக எடுக்கப்பட்டு வருகிறது.
எனவே இதை கருத்தில் கொண்டு பத்திரப் பதிவு தொடர்பான நடவடிக்கைகளை பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பத்திரப்பதிவை நாளை வைத்து கொள்வதற்கு பதில் மாற்று தேதியில் வைத்து கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications