சத்தமேயில்லையே.. "ஹைவேஸில்" அதை பார்த்தீங்களா.. நெடுஞ்சாலையில் இது எப்போ வந்தது? எகிறுதா நம்பர்?
சென்னை: சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலாகி உள்ள நிலையில், தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையும் அதிகமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் 6805 கிமீ தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு பல்வேறு மாநிலங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன... இதில், 5128 கி.மீ. சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமும், 1677 கி.மீ. சாலைகள் மாநில நெடுஞ்சாலைத் துறையின் தேசிய நெடுஞ்சாலை பிரிவு வாயிலாகவும் பராமரிக்கப்படுகின்றன.
அதேபோல, கடந்த 1997-ம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி ஏற்படுத்தப்பட்ட சுங்கச்சாவடிகளுக்கு ஒவ்வொரு வருடத்தின் செப்டம்பர் மாதத்திலும், 2008-ம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி ஏற்படுத்தப்பட்ட சுங்கச்சாவடிகளுக்கு ஒவ்வொரு ஆண்டு ஏப்ரல் மாதத்திலும் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.

எதிர்ப்புகள்: அந்தவகையில், தற்போதுகூட 28 சுங்கச்சாவடிகளில் 10 சதவீதம் வரை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.. காரணம், தேசிய நெடுஞ்சாலை ஆணைய விதிகள், வழிமுறைப்படி கழிப்பறை, ஓய்வறை, வாகன நிறுத்தம் உள்ளிட்ட எந்த வசதியையும் மேற்கொள்வதில்லை என்ற புகார்கள் வெடிக்கின்றன.
தமிழகத்தில் 63 சுங்கச்சாவடிகள் இருக்கும் நிலையில், 1997-ல் ஏற்படுத்தப்பட்ட, 14 சுங்கச்சாவடிகள் அவற்றின் திட்ட மதிப்பீட்டைத் தாண்டி, கட்டணம் வசூல்செய்கின்றன, தன்னிறைவு சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என்று அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்தபோதும் இந்த நிலை நீடிப்பதாக வேதனைகள் கிளம்புகின்றன.
விலைவாசி உயர்வு: ஏற்கனவே விலைவாசி உயர்வால், பொதுமக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலையில், சுங்கக்கட்டணத்தையும் உயர்த்தினால் அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும்.. அதுமட்டுமல்ல, ஒவ்வொரு லிட்டர் டீசல், பெட்ரோலில் ரூ.2 முதல் ரூ.3.50 என சாலை வரி வசூல் செய்யும்நிலையில், இந்த கட்டண உயர்வால், நடுத்தர, ஏழை மக்கள் மேலும் நொந்துபோவார்கள் என்றும் வருத்தங்கள் எழுகின்றன.
இப்படிப்பட்ட சூழலில், சத்தமேயில்லாமல் சுங்கச்சாவடிகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. முதலில், 34 சுங்கச்சாவடிகளில் கட்டணம் அமல்படுத்தப்பட்ட நிலையில், 2004 - 2008 வருடங்களில் சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை, 54-ஆக உயர்ந்தாகவும், சமீபத்திய நிலவரப்படி, தமிழகத்தில் 63 சுங்கச்சாவடிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சுங்கச்சாவடிகள்: இதனிடையே, தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளதாம்.. குறிப்பாக, கள்ளக்குறிச்சி - கீழ்குப்பம், சிவகங்கை - கோடிகோட்டை, அரியலுார் - மணக்கேத்தி, விழுப்புரம் - தென்னம்மாதேவி, கன்னியாகுமரி - திருப்பதிசாரம் பகுதிகளில் புதிய சுங்கச்சாவடிகள் உயர்த்தப்பட்டுள்ளதாம்.












Click it and Unblock the Notifications