சிட்லபாக்கம் ஏரி கட்டுமானங்கள், ஆக்கிரமிப்புகள்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சென்னை: சிட்லபாக்கம் ஏரியின் புலப்படம் மற்றும் ஏரியை சுற்றியுள்ள கட்டுமானங்கள், ஆக்கிரமிப்புகள் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் ஏரி, முன்பு நீர்ப்பாசன ஏரியாக இருந்தது. 219 ஏக்கர் ஆயக்கட்டு பரப்பைக் கொண்ட இந்த ஏரி, பின்னர் நகர்ப்புற ஏரியாக மாறிவிட்டது.

இந்நிலையில் சிட்லபாக்கம் ஏரியில் அப்பகுதியில் உள்ள குப்பைகள் கொட்டப்பட்டு எரிக்கப்படுவது, தாம்பரம் நகராட்சியின் கழிவுநீர் கொட்டப்படுவது, ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பது ஆகியவை குறித்தும், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேசன் 2018-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் விதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள், ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மாநிலம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் பாதுகாப்பது, சட்டவிரோதக் கட்டுமானங்களை தடுப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக விரைவில் அரசாணை வெளியிடப்படும் எனவும் தமிழக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சிட்லபாக்கம் ஏரியை பொறுத்தவரை அங்குள்ள விதிமீறல் மற்றும் அனுமதியின்றி கட்டபட்டுள்ள கட்டிடங்களை விரைந்து அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், அப்பணிகள் முடிந்ததும் அறிக்கை அளிக்கவுள்ளதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கபட்டது.
இதனையடுத்து, சிட்லப்பாக்கம் ஏரியின் புலப்படம், ஏரியைச் சுற்றியுள்ள கட்டுமானங்கள், ஆக்கிரமிப்புகள், அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை செப்டம்பர் 29ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.












Click it and Unblock the Notifications