எஸ்ஐ ருத்திர சுதா மீது சட்ட நடவடிக்கை.. திருவல்லிக்கேணி துணை கமிஷனருக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
சென்னை: சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் கடந்த 2018-ம் ஆண்டு இரு தரப்பினர் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்தனர். இந்நிலையில் ஒரு தரப்பினர் புகாரை ஏற்றுக்கொண்ட பெண் சப்-இன்ஸ்பெக்டர், எதிதரப்பினர் கொடுத்த புகார் குறித்து தெரியவில்லை என்று எழும்பூர் கோர்ட்டில் கூறியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் ருத்திர சுதா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க திருவல்லிக்கேணி துணை காவல் கமிஷனருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் கடந்த 2018-ம் ஆண்டு தகராறின் அடிப்படையில் இரு தரப்பினர் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்துள்ளனர். இந்த புகார்களை பெற்றுக்கொண்ட போலீசார் இருதரப்புக்கும் ரசீது கொடுத்துள்ளார்கள். ஆனால், ஒரு தரப்பு கொடுத்த புகாரின் அடிப்படையில், கிரேஷ் செல்வராணி என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறார்கள்..

ஆனால் கிரேஷ் செல்வராணி தரப்பில் கொடுத்த புகாரின் அடிப்படையில் எதிர் தரப்பினர் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இந்தநிலையில், கிரேஷ் செல்வராணி மீதான வழக்கு எழும்பூர் 14-வது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
அப்போது, விசாரணை அதிகாரியிடம் குறுக்கு விசாரணை செய்தனர்.. எதிர்தரப்பினர் மீது கிரேஷ் செல்வராணி கொடுத்த புகார் குறித்து எதுவும் தெரியாது என்று பதில் அளித்தார். பின்னர் இதுகுறித்து கிரேஸ் செல்வராணி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தபோது, அவர் மீதான புகாரை முடித்து வைத்து விட்டதாக காவல் துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து கிரேஸ் செல்வராணி மனுவை எழும்பூர் நீதிமன்றம் கடந்த டிசம்பர் 5-ந்தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கிரேஸ் செல்வராணி சார்பில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன் பிறப்பித்த உத்தரவில் கூறுகையில், புகார் கொடுத்தவர் தன் புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரங்களை தெரிந்துக்கொள்ள உரிமை இருக்கிறது. ஆனால், விசாரணை அதிகாரி, வழக்கு தொடர்பான ஆவணங்களை முழுமையாக படிக்காமல், கீழ் நீதிமன்றத்தில் சாட்சி அளித்துள்ளார்.
அவருக்கு மனுதாரர் எதிர்தரப்பினர் மீது கொடுத்த புகார் குறித்து எதுவும் தெரியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் யாருக்கு பாதிப்பு என்றால், மனுதாரருக்குத்தான். பாதிக்கப்பட்டவர் புகார் கொடுத்தால், அதன் மீது நடவடிக்கை எடுத்து அவர்களை போலீசார்தான் காக்க வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது. ஆனால், மந்தமான, திறமையில்லாத காவல் அதிகாரிகளால், புகாதாரர்கள்தான் பாதிக்கப்படுகின்றனர். இது குற்றம் செய்தவகளுக்கு சாதகமாகி விடுகிறது. லஞ்சம் பெற்று இதுபோல செயல்படும் போலீஸ் அதிகாரிகளால், புகார்தாரர்கள் பாதிக்கப்படக்கூடாது.
எனவே, இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான சப்-இன்ஸ்பெக்டர் ருத்திர சுதா மீது திருவல்லிக்கேணி துணை போலீஸ் கமிஷனர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து டி.ஜி.பி. அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணையை ஜனவரி 27-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன்' என நீதிபதி பி.வேல்முருகன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications