மயில் சிலை திருட்டு.. திருமகள் மீதான வழக்கு.. இறுதி அறிக்கை தாக்கல் செய்ய தடை
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் மயில் சிலை திருட்டு தொடர்பாக அறநிலைய துறை கூடுதல் ஆணையர் மீதான வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் மயில் சிலை திருட்டு தொடர்பாக, இந்து சமய அறநிலைய துறை கூடுதல் ஆணையர் திருமகள், தலைமை ஸ்தபதி முத்தையா உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்ய கோரி திருமகள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, திருமகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முத்தையா ஸ்தபதி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அவருக்கு எதிராக இறுதி அறிக்கை தாக்கல் செய்ய தடை விதித்துள்ளதாக வாதிட்டார்.
இதை ஏற்ற நீதிபதி, கூடுதல் ஆணையர் திருமகள் மீதான வழக்கு விசாரணையை தொடரலாம் எனவும், இறுதி அறிக்கை தாக்கல் செய்ய கூடாது என தடைவிதித்தும் உத்தரவிட்டார்.
மேலும், திருமகள் தாக்கல் செய்த மனுவை, முத்தையா ஸ்தபதி தாக்கல் செய்த மனுவுடன் சேர்த்து, அக்டோபர் 31ம் தேதிக்கு நீதிபதி ரமேஷ் தள்ளிவைத்தார்.