அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் முறையீடு.. நாளை விசாரணை
சென்னை: அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இது நாளை விசாரிக்கப்படவுள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் தரிசனத்திற்காக கூட்டம் அலைமோதுகிறது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்துக்காக வந்து செல்கின்றனர்.
பக்தர்களின் கூட்டத்தை சரி செய்ய மாவட்ட நிர்வாகமும், காவல்துறையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அப்படியும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால், பக்தர்கள் பல மணிநேரம் காத்திருந்து அத்திவரதரை தரிசனம் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதுவரை சுமார் 70 லட்சம்பேர் அத்திவரதரை தரிசித்துள்ளனர். இன்னும் 3 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆதிகேசவலு முன்பு மூத்த வழக்கறிஞர் பிரபாகரன் இன்று ஆஜராகி, அத்திவரதரை தரிசிக்க தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். இன்னும் ஏராளமானோர் பார்க்க ஆர்வமாக உள்ளனர். எனவே, அத்திவரதர் தரிசனத்தை மேலும் ஒரு மண்டலம் நீட்டிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று முறையிட்டார்.
இதை கேட்ட நீதிபதி, மனு தாக்கல் செய்யுங்கள் விசாரிக்கிறேன் என்றார். இந்த மனு நாளை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.