முதல்வர் ஸ்டாலினுக்கு மருத்துவமனையில் 2 மணி நேரம் பரிசோதனை.. என்ன நடந்தது?
சென்னை: தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் முதுகுவலி காரணமாக சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சில மணிநேரங்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் அதிகாரிகளுடன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார் முதல்வர் ஸ்டாலின்.
தமிழக முதல்வராக கடந்த ஆண்டு மே மாதம் பொறுப்பேற்றார் முதல்வர் ஸ்டாலின். கொரோனா பரவல்,மழை வெள்ள சேதம் என அடுத்தடுத்து பாதிப்புகள் ஏற்பட்டன. தற்போது கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பருவமழை காலத்தில் வெள்ள சேதம் ஏற்படாமல் தடுக்க மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பலமுனை தாக்குதல்
முதல்வர் பதவி என்பது சாதாரண பணியல்ல..எது நடந்தாலும் என்னைத்தான் குற்றம் சொல்வார்கள் என்று கடந்த சில வாரங்களுக்கு முன்பு பொதுக்குழு கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். அதிக மழை பெய்தாலும், மழை பெய்யாவிட்டாலும் என்னைதான் குறை சொல்வார்கள். பல்முனை தாக்குதல்களுக்கு பதில் சொல்ல கடமை பட்டவன் நான். ஒரு பக்கம் திமுக தலைவர் மறு பக்கம் தமிழ்நாடு முதல்வர். மத்தளத்திற்கு இரண்டும் பக்கம் அடி என்பது போல் உள்ளது எனது நிலைமை. இந்தச் சூழலில் உள்ள என்னை மேலும் துன்பப்படுத்தும் வகையில் மூத்தவர்கள் ,அமைச்சர்கள் நடந்து கொண்டால் நான் யாரிடம் கூறுவது என்று வேதனையுடன் கூறினார் முதல்வர் ஸ்டாலின்.

ஓயாத பணி
கோவையில் கடந்த 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று கார் சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்தார். முதலில் சிலிண்டர் வெடித்து விபத்து என்று கருதப்பட்ட நிலையில் அடுத்தடுத்து வெளியான தகவல்கள் அதிர வைத்தனர். உயரதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டார். தீபாவளி நாளில் இருந்தே முதல்வர் ஸ்டாலின் கண்காணிப்பில் அவரது ஆலோசனையின் பேரில் விசாரணை நடைபெற்றதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

உடல் நலம் சரியில்லை
கோவை கார் வெடித்த சம்பவம் குறித்து முதல்வர் ஸ்டாலின் மீது எதிர்கட்சியினர் பல்வேறு விமர்சனங்களை வைத்தனர். அதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, உடல் நலம் சரியில்லாத நிலையிலும் முதல்வர் ஸ்டாலின் உயரதிகாரிகளுடன் தொடர் ஆலோசனை செய்ததாக கூறினார்.

மருத்துவ பரிசோதனை
முதலமைச்சர் ஸ்டாலின், மருத்துவ பரிசோதனைக்காக, சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நேற்று இரவு சென்றார். இரவு 7.20 மணிக்கு தனது இல்லத்தில் இருந்து மருத்துவமனைக்கு புறப்பட்டுச் சென்ற அவர், இரண்டு மணி நேர பரிசோதனைக்குப் பிறகு வீடு திரும்பினார். ராமச்சந்திரா மருத்துவமனையில் ஏழாவது மாடியில் உள்ள மையத்தில் உடல் பரிசோதனை செய்யப்பட்டது, சுமார் 2 மணி நேர பரிசோதனைக்கு பின்னர் வீடு திரும்பினார்.

மருத்துவமனையில் நடந்தது என்ன?
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், முதல்வருக்கு வழக்கமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், முதுகு வலி காரணமாக இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு முதல்வர் ஸ்டாலின் வந்ததால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். முதல்வர் ஸ்டாலினுடன் அவரது மனைவி, மகள் , மருமகன்,ஆகியோரும் வந்திருந்தனர். முதல்வருக்கு நடைபெற்ற திடீர் மருத்துவ பரிசோதனையால் சில மணிநேரங்கள் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications