திருத்தம்.. சேலம் தொகுதியை பிடிக்க காங்கிரஸில் 2 பேர் போட்டி போடுறாங்களாம்
சேலம் தொகுதிக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 2 முக்கிய நபர்கள் போட்டியிட போவதாக கூறப்படுகிறது.
சென்னை: சேலம் லோக்சபா தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டால் அத்தொகுதியில் போட்டியிட 2 பேருக்கு இடையே கடும் போட்டி கிளம்பியுள்ளதாம்.
காங்கிரஸ் கட்சிக்கு திமுக கூட்டணியில் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் புதுச்சேரியும் அடக்கம். தமிழகத்தைப் பொறுத்தவரை 9 தொகுதிகள் எவை என்பது இன்னும் தெரியவில்லை. ஆனால் நிச்சயம் சேலம் அதில் ஒன்று என்று சொல்கிறார்கள்.
சேலத்தைப் பொறுத்தவரை அது காங்கிரஸ் கட்சியின் கோட்டை போல ஆகும். திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துதான் அக்கட்சி போட்டியிடுவது வழக்கம். கூட்டணி அமைக்கும்போதெல்லாம் மறக்காமல் சேலத்து மாம்பழம் கைக்கு விடுவது வழக்கம்.
அதிமுக-திமுக
சேலம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி மொத்தம் 9 முறை வெற்றி பெற்று அசைக்க முடியாத இடத்தில் உள்ளது. அதிமுக 3 முறையும், திமுக 3 முறையும் மட்டுமே இங்கு வென்றுள்ளன. பெரும்பாலும் இந்தத் தொகுதியை காங்கிரஸுக்கு திமுக, அதிமுக விட்டுக் கொடுத்து விடுவது வழக்கமாக உள்ளது.
வெற்றிக்கொடி
கே ராஜாராம், ரங்கராஜன் குமாரமங்கலம், வாழப்பாடி ராமமூர்த்தி என பெருந்தலைகள் உறுப்பினராக இருந்த தொகுதி இது. தற்போது இது அதிமுக வசம் இருந்து வருகிறது. கடந்த 2 தேர்தல்களாக அதிமுகதான் வெற்றிக் கொடி நாட்டி வருகிறது.
காங்கிரஸ்
இந்த தொகுதியை தற்போது காங்கிரஸ் குறி வைத்துள்ளது. குறிப்பாக முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு சேலத்தில் எப்படியாவது வென்று விட வேண்டும் என்று பலத்த முஸ்தீபுகளுடன் தயாராக காத்திருக்கிறார். அவருக்கு சீட் கிடைக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் கருதப்படுகிறது.
மோகன் குமாரமங்கலம்
அதேசமயம், இன்னொரு கடுமையான போட்டியாளும் களம் குதித்துள்ளார். அவர் மோகன் குமாரமங்கலம். மறைந்த ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மகன்தான் மோகன் குமாரமங்கலம். பெரிய தொழிலதிபர். பணப் பசைக்கு பஞ்சமே இல்லை. செலவுக்கு கவலை இல்லை. எனவே இவரும் முட்டி மோதுகிறாராம்.
கடும் போட்டி
மறுபக்கம் அதிமுக இந்தத் தொகுதியை குறி வைத்துள்ளது. அங்கு செம்மலை சீட் வாங்க கடுமையாக முயன்று வருகிறாராம். ஒரு வேளை இது பாமகவுக்குப் போய் விட்டால், போட்டி கடுமையாக இருக்கும் வாய்ப்புள்ளது. ஆக, சேலத்து மாம்பழம் யாருக்கு தித்திக்கப் போகிறது என்பது தேர்தல் திருவிழாவின் இறுதியில் தெரிய வரும்.