கோவை டூ தென்காசி வரை.. அடுத்த 3 மணி நேரம் பிச்சு உதறப்போகுது கனமழை.. உஷார் மக்களே!
சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுவதன் காரணமாக இன்று இரவு 7 மணி வரை நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி என 8 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை வெளுத்து வாங்கும் என வானிலை மையம் கூறியிருக்கிறது.
தமிழகத்தில் நேற்று பரவலாக மழை கொட்டியது. திருவள்ளூர் முதல் நெல்லை வரை பல்வேறு இடங்களில் மழை பெய்தது. வேலூர், கடலூர், சேலம், கோவை, விருதுநகர், திருச்சி, மதுரை, நெல்லை, தென்காசி என பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் 8 செமீ அளவுக்கு கனமழை கொட்டி தீர்த்தது.

அடுத்த 3 மணி நேரம்
இதனால் கோடை வெயில் சற்று தணிந்தது. இன்றும் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் கூறியிருந்தது. இந்த நிலையில் தான் அடுத்த 3 மணி நேரத்தில் கோவை முதல் தென்காசி வரை 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
8 மாவட்டங்கள் என்னென்ன?
"தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர் மற்றும் மதுரை ஆகிய 8 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனால் ஒரு சில இடங்களில் தண்ணீர் தேங்க வாய்ப்பு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், "ராயலசீமா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள் முதல் மன்னார் வளைகுடா வரை, சுமார் 0.9 கிமீ உயரத்தில் தமிழகம் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதனால், இன்று (05-04-2026) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விருதுநகர், தேனி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இடி, மின்னலுடன் மழை கொட்டும்
06-04-2026: தென்தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விருதுநகர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
07-04-2026: தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 08-04-2026 தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
11 ஆம் தேதி வரை மழை
09-04-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், தமிழக கடலோர மாவட்டங்கள், மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். 10-04-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், தமிழக கடலோர மாவட்டங்கள், மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்
11-04-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்" என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications