வட தமிழக மாவட்டங்களில் பலத்த மழை.. சென்னையில் இடியுடன் கூடிய மழை.. வானிலை மையம் தகவல்
Recommended Video
சென்னை: தமிழகத்தில் மேலும் இரு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வட தமிழக மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்றிரவு முதல் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கர்நாடகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனிடையே தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்
இதனால் வடதமிழக மாவட்டங்களான காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய பகுதிகளின் சில இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக குறிப்பிட்டார்
தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமானது முதல் பலத்த மழை ஒரு சில இடங்களில் பெய்யும் என்றார் தலைநகர் சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக பாலச்சந்திரன் கூறியுள்ளார்
அதே போல தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கேரளாவை ஒட்டியுள்ள தமிழகப் பகுதிகளில் மழை பெய்யும் என்றும் கோவை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களின் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பேசிய பாலச்சந்திரன் கடந்த ஜூன் துவக்கம் முதல் தற்போது வரை தென்மேற்கு பருவமழை 81 மி.மீட்டர் பெய்துள்ளது. இயல்பான மழை அளவான 114 மி.மீட்டரை விட 23 மி.மீட்டர் குறைவாக மழை பெய்துள்ளது. இது சராசரி மழையை விட 29 சதவீதம் குறைவு என்றார்
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 8 செ.மீட்டர், அண்ணா சாலையில் 7 செ.மீட்டர், காவேரிபாக்கத்தில் 5 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக கூறியுள்ளார்.