சேலம், தருமபுரி, திருவண்ணாமலையில் இடியுடன் கனமழை - எத்தனை நாளைக்கு மழை இருக்கு தெரியுமா
தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக சேலம், தருமபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை: வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் இன்று சேலம், தருமபுரி, திருவண்ணாமலை இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் நேற்று அறிவித்தது. வானிலை மையம் அறிவித்தது போலவே நேற்று மாலையில் பல மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்தது.
கடந்த 24 மணி நேரத்தில் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 10 செமீ மழை பதிவாகியுள்ளது. சோளிங்கர், திருவாலங்காட்டில் 8 செமீ மழையும், காவேரிப்பாக்கத்தில் 7 செமீ, பள்ளிப்பட்டு 6 செமீ மழையும் பதிவாகியுள்ளது. மதுரையில் 5 செமீ மழை பதிவாகியுள்ளது. திருச்சி, மேட்டூர், நத்தம், நீடாமங்கலம் உள்ளிட்ட பல ஊர்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்துள்ளது.
இன்று முதல் 28 ஆம் தேதி வரைக்கும் எந்தெந்த ஊர்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சேலம், தருமபுரி, திருவண்ணாமலை இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
25ஆம் தேதி உள் மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 26ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி காரைக்காலில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 27ஆம் தேதி வட மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
28ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. புதுவை, காரைக்காலில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும், அதிகபட்ச வெப்பநிலை 37 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் வருகிற 27ஆம் தேதி வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் , அவ்வப்போது 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக் கூடும் என்பதால் மேற்கூறிய தேதிகளில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.