அடுத்த 24 மணி நேரத்தில்.. இந்த 4 மாவட்டங்களில் கன மழை பெய்யும்.. வானிலை ஆய்வு மையம் கணிப்பு
சென்னை: ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் இந்த ஆண்டு ஓரளவு இயல்பான அளவிற்கு பெய்துள்ளது. வட கிழக்கு பருவமழை காலம் முடிவுபெறும் நிலைக்கு வந்துவிட்டது. இந்த நிலையில் சென்னைக்கு இந்த காலகட்டத்தில் பெய்ய வேண்டிய மழை அளவுக்கு பெய்யவில்லை. எனவே, சென்னைக்கு குடிநீர் வழங்கக் கூடிய 4 ஏரிகளும் முழுமையாக, நிரம்பவில்லை.
ஆனால், தென் மாவட்டங்களில் பல வருடங்களுக்கு பிறகு, இந்த ஆண்டு மழை அதிகமாக பெய்துள்ளது. மழையை அதிசயமாக பார்க்கும் சூழ்நிலையிலுள்ள தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் இந்த ஆண்டு நல்ல மழை பெய்தது இதற்கு உதாரணம்.
இந்த நிலையில் தென் மாவட்டங்களில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் இன்று கூறியுள்ளதாவது: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வெப்பசலனம் காரணமாக தென் தமிழகத்தில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
இந்த டெல்லி இளம் மாணவ, மாணவிகளை பாருங்க.. எவ்வளவு க்யூட்.. போலீசாரை எப்படியெல்லாம் சமாளிக்கிறாங்க
ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. வட தமிழகத்திலும், புதுவையிலும் லேசான மழை பெய்யக்கூடும்.
குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் 40 கி.மீ முதல் 50 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீச வாய்ப்பு இருக்கிறது. அடுத்த 24 மணிநேரத்துக்கு மீனவர்கள் இந்த கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.