தமிழகத்தில் 7 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மிக கனமழை - வானிலை மையத்தின் ஜில் அறிவிப்பு
வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணிநேரத்தில் நாகை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, சிவகங்கை, மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: குமரிக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணிநேரத்தில் நாகை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, சிவகங்கை, மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் கணித்துள்ளது. காரைக்கால்,புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
வட கடலோர மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலேயே அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் விழுப்புரம் மாவட்டம் மணம்பூண்டியில் 17 செ.மீ.மழை பதிவாகி உள்ளது. அனந்தபுரம், கேதார், முகையூர், திருக்கோவிலூர் 16 செ.மீ., புதுச்சேரி 15 செ.மீ. மயிலம் 13 செ.மீ. உள்ளிட்ட பகுதிகளில் மழை பதிவாகி உள்ளது.
தமிழகத்தில் நடப்பாண்டு வடகிழக்குப் பருவமழை இயல்பை விட 8 சதவிகிதம் கூடுதலாக பெய்துள்ளது. சென்னையில் இயல்பை விட 41 சதவிகிதம் கூடுதலாக பெய்துள்ளதாகவும் வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஜூன் முதல் அக்டோபர் வரை தென்மேற்குப் பருவமழை காலமாகும். இந்த ஆண்டு சரியான நேரத்தில் தொடங்கி மழை பெய்தது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைகள் நிரம்பின. வடகிழக்குப் பருவமழை அக்டோபர் மாதத்தில் தொடங்கியது. கார்த்திகை மாதத்தில் கடுமையான மழை கொட்டித்தீர்த்தது.
அடுத்தடுத்து உருவான நிவர், புரேவி புயல்களால் மழை கொட்டித்தீர்த்தது. சென்னை, கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன. பயிர்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன. மீண்டும் கனமழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் அறுவடைக்கு தயாராக உள்ள நெற் பயிர்கள் பாதிப்பிற்கு ஆளாகும் என்று விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications