பெருங்களத்தூர் டூ தாம்பரம் ரூட் கிளியர்.. சென்னைக்குள் நுழைய ஊர் சுற்றிய பேருந்துகள்..பயணிகள் அவதி
சென்னை: பொங்கல் பண்டிகை முடிந்த நிலையில் சொந்த ஊர் சென்ற மக்கள் மீண்டும் சென்னை திரும்ப தொடங்கியுள்ளனர். இதனால் பெருங்களத்தூர் தொடங்கி தாம்பரம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் அதிகாலையில் அரசு பேருந்துகள் மதுரவாயல் பைபாஸ் வழியாக திருப்பி விடப்பட்டன. ஆம்னி பேருந்துகள் வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலை வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டதால் சுமார் 2 மணி நேரம் தாமதமாகதான் பேருந்துகள் சென்னையில் நுழைந்தன.
பொங்கல் விழாவையொட்டி 14ம் தேதி தொடங்கி 17ம் தேதி வரை பெரும்பாலான நிறுவனங்கள் விடுமுறையை அறிவித்திருந்தன. சில நிறுவனங்கள் 13ம் தேதியே விடுமுறையை அறிவித்துவிட்டன. இதனையடுத்து தென் மாவட்டங்களிலிருந்து சென்னையில் வந்து தங்கி வேலை பார்க்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக சொந்த ஊர் நோக்கி படையெடுக்க தொடங்கினர். மக்கள் பயணம் செய்வதற்கு ஏதுவாக கூடுதல் பேருந்துகள் இயக்குவது தொடர்பாக கடந்த 3ம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அமைச்சர் சிவசங்கர் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் சென்னையிலிருந்து 12ம் தேதியிலிருந்து 14ம் தேதி வரை சுமார் 4,449 பேருந்துகள் இயக்கப்படுவதாக முடிவெடுக்கப்பட்டது. அதன்படி ஏற்கெனவே இயக்கப்பட்ட பேருந்துகளுடன் இப்பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டது. இந்த மூன்று நாட்கள் மொத்தமாக சுமார் 10,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

சிறப்பு பேருந்துகள்
அதேபோல மற்ற மாவட்டங்களிலிருந்து இதர மாவட்டங்களுக்கு 6,183 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. ஒட்டுமொத்தமாக பொங்கல் பண்டிகையையொட்டி மாநிலம் முழுவதும் சுமார் 16,932 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பொங்கல் பண்டிகை முடிந்ததையடுத்து, சொந்த ஊரிலிருந்து மக்கள் சென்னை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக நேற்றிரவு (ஜன.17) முதல் பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசல் தொடங்கிவிட்டது. மக்கள் சென்னை திரும்புவதற்காக 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக 4,334 பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சர் அறிவித்திருந்தார்.

சென்னை நோக்கி
அதன்படி தற்போது ஏற்கெனவே இயக்கப்படும் பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 15,599 பேருந்துகளில் மக்கள் சென்னை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர். கடந்த 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை மட்டும் சுமார் 6 லட்சம் பேர் அரசு பேருந்துகளில் பயணித்துள்ளனர். தற்போது இதே எண்ணிக்கையில் மக்கள் சென்னை நோக்கி திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். இன்று வழக்கம் போல பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் சென்னை திரும்புவது கட்டாயமாகியுள்ளது. தென்மாவட்டங்களை பொறுத்த அளவில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

குற்றச்சாட்டு
அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்பட்டாலும் இந்த எண்ணிக்கை போதவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அரசு பேருந்துகளில் இடம் கிடைக்காததால் தனியார் பேருந்துகளில் மக்கள் பயணிக்க தொடங்கியுள்ளனர். வழக்கமாக பண்டிகை தினத்தன்று கட்டணத்தை ஏற்றும் தனியார் பேருந்துகள், இந்த முறை பண்டிகை முடிந்த நாளிலும் கட்டணத்தை அதிகரித்துள்ளதாக பயணிகள் கூறி வருகின்றனர். சிலர் இந்த கட்டணத்திற்கு காரை எடுத்துக்கொண்டே கிளம்பி விடலாம் என்று வாடகை கார்களில் பயணிக்க தொடங்கியுள்ளனர். இவையனைத்தும் இன்று விடியற்காலை பெருங்களத்தூரை அடைந்த நிலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இணைப்பு பேருந்து
போக்குவரத்து நெரிசல் தாம்பரம் வரை நீடித்துள்ளதால் வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வோர் என அனைத்து தரப்பினரும் கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும் நிலையில் மெட்ரோ ரயில் சேவை காலை 5 மணிக்கே தொடங்கிவிட்டது. இணைப்பு பேருந்துகளும் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த இணைப்பு பேருந்துகளின் எண்ணிக்கை போதுமான அளவில் இல்லையென பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர். போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய அதிகாலை முதல் பணியில் ஈடுபட்ட போக்குவரத்து காவலர்கள் போக்குவரத்தை திருப்பிவிட்டனர். அதாவது அரசு பேருந்துகள் மதுரவாயல் பைபாஸ் வழியாகவும், ஆம்னி பேருந்துகள் வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலை வழியாகவும் திருப்பிவிடப்பட்டதால் பெருங்களத்தூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படவில்லை. ஆனால், பேருந்துகள் சுற்றிவிடப்பட்டதால் சுமார் 2 மணி நேரம் தாமதமாகதான் இப்பேருந்துகள் சென்னைக்குள் நுழைந்தன. இதனால் அலுவலகம் செல்லும் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications