தீபாவளி கொண்டாட்டம் முடித்த சென்னை திரும்பும் மக்கள்.. தாம்பரம் டூ சென்னை கடும் போக்குவரத்து நெரிசல்
சென்னை: தீபாவளி பண்டிகை முடித்து மக்கள் சென்னை திரும்பி வரும் நிலையில், தாம்பரம் ஜிஎஸ்டி சாலை மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசல் காரணமாக குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து சேர முடியாமல் பயணிகள் தவித்து வருகின்றனர்.
சிறப்பு பேருந்துகள் பல இயக்கப்பட்டாலும் கூட பயணிகள் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வருவதாக கூறியுள்ளனர்.

சென்னை திரும்பும் மக்கள்
கடந்த திங்கட்கிழமை தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில், சொந்த ஊர் சென்ற மக்கள் தற்போது சென்னை திரும்பி வருகின்றனர். இதன் காரணமாக விடியற்காலை முதல் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. சென்னையிலிருந்து செங்கல்பட்டு செல்லும் சாலை முழுவதும் போக்குவரத்து நெரிசலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு பேருந்துகள் பல இயக்கப்பட்டிருந்தாலும் பயணிகள் சிரமத்துடனே பயணித்ததாக கூறுகின்றனர்.

போக்குவரத்து நெரிசல்
போக்குவரத்து நெரிசலை சரி செய்ய சில மாற்றங்களை போக்குவரத்து காவல்துறையினர் செய்துள்ளனர். அதன்படி அரசு பேருந்துகள் மட்டுமே தாம்பரம் ஜிஎஸ்டி சாலை வழியாக சென்னைக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆம்னி பேருந்துகள் அனைத்தும் மதுரவாயல் பைபாஸ் வழியாக திருப்பி விடப்பட்டிருக்கிறன. இதன் காரணமாக ஓரளவு நெரிசல் குறைந்திருக்கிறது. மட்டுமின்றி போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்தை சீர்படுத்தி வருகின்றனர்.

அதிக கட்டணம்
சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும்போது பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆனால் தற்போது மக்கள் சென்னை திரும்புகையில் பெருங்களத்தூரில் நெரிசல் இல்லை. புதியதாக கட்டப்பட்ட பாலம் திறக்கப்பட்டுள்ளதால் வாகனங்கள் அது வழியாக வந்து சேர்ந்துள்ளன. நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளில் இருசக்கர வாகனம் கூட பயணிக்க முடியாத நிலை நீடித்து வருகிறது. போக்குவரத்து நெரிசல் ஒருபுறம் இருந்தாலும் சென்னை வந்த மக்களுக்கு போதுமான மாநகர பேருந்துகள் இயக்கப்படவில்லை என்றும் பயணிகள் குற்றச்சாட்டியுள்ளனர். இதனை பயன்படுத்தி ஆட்டோக்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

போதுமான பேருந்து
தீபாவளிக்காக மக்கள் சொந்த ஊர் பயணிக்க சென்னையிலிருந்து மட்டும் சுமார் 94 ஆயிரம் பேர் முன் பதிவு செய்திருந்தனர். இவர்களுக்காக சென்னையிலிருந்து மட்டும் 4,218 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. மாநிலத்தின் மற்ற இடங்களிலிருந்து 6,370 சிறப்பு பேருந்துகள் என தமிழ்நாடு முழுவதும் சுமார் 10,588 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. முன்னதாக மக்கள் சொந்த ஊர் பயணிக்க சென்னையில் 340 சிறப்பு மாநகராட்சி பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால் தற்போது இந்த மாநகர பேருந்துகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லையென பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications