சாகசம்.. சர்ச்சை.. உதயநிதியின் செயலாளராக பிரதீப் யாதவ் ஐஏஎஸ் நியமனம்! சாதித்ததும்.. சறுக்கியதும்!?
சென்னை : முதன்முறையாக தமிழ்நாடு துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டு இருக்கும் நிலையில் அவரது செயலாளராக பிரதீப் யாதவ் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரோடு சேர்த்து பல ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கும் நிலையில், பிரதிப் யாதவ் யார்? அவரது பின்னணி என்ன? என்பது குறித்து பார்க்கலாம்..
தயாரிப்பாளராகவும் நடிகராகவும் திரைத்துறையில் வலம் வந்த உதயநிதி ஸ்டாலின், அதற்குப் பிறகு திமுக நிகழ்ச்சிகளில் தீவிரமாக கலந்து கொண்டார். தொடர்ந்து சட்டமன்றத் தேர்தல், அதற்கு முன்பாக மக்களவைத் தேர்தலில் தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதனால் கட்சியினரிடையே அவரது செல்வாக்கு அதிகரித்தது. தொடர்ந்து சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட அவர் முதன் முறையாக எம்எல்ஏவாக சட்டப்பேரவைக்குள் நுழைந்தார்.
அதன் பிறகு அமைச்சராக நியமனம் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது ஆதரவாளர்கள் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். தொடர்ந்து கட்சியினரின் கோரிக்கையை அடுத்து அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார் உதயநிதி ஸ்டாலின். இதற்கிடையே கடந்த சில நாட்களாக அவர் துணை முதலமைச்சர் ஆக நியமனம் செய்யப்பட இருப்பதாக தகவல் பரவியது.
இதை அடுத்து எதிர்பார்த்தது போலவே துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டார். அவரோடு செந்தில் பாலாஜி, நாசர் உள்ளிட்ட பலரும் அமைச்சர்களாக பதவி ஏற்று கொண்டனர். மேலும் ஏற்கனவே அமைச்சர்களாக இருந்த சிலரும் துறை மாற்றத்திற்கும் அமைச்சரவையிலிருந்து வெளியேற்றத்திற்கும் ஆளாகினர். இந்த நிலையில் துணை முதலமைச்சர் செயலாளராக யார் நியமனம் செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
ஏற்கனவே கணித்தபடி பிரதீப் யாதவ் ஐஏஎஸ் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுபோல மேலும் பல துறைகளில் செயலாளர்களும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் உயர் கல்வித் துறை செயலாளராக கோபால் ஐஏஎஸ், மின்வாரிய தலைவராக இருந்த ராஜேஷ் லக்கானி வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதேபோல மின்வாரியத் துறை தலைவராக நந்தகுமார், சமூக நலத்துறை ஆணையராக லில்லி ஐஏஎஸ், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையராக இருந்த சுந்தரவல்லி கல்லூரி கல்வித்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். இதேபோல வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையராக விஷ்ணு சந்திரன் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். தமிழ்நாடு தேர்தல் அதிகாரியான சத்திய பிரதா சாகுவிற்கு, கால்நடை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலாளராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் முதலமைச்சர் உத்தரவின் பேரில் இந்த மாற்றம் செய்யப்பட்டு இருக்கும் நிலையில் பிரதீப் யாதவ் துணை முதல்வரின் செயலாளராக மாற்றம் செய்யப்பட காரணம் என்ன? அவரது பின்னணி என்ன? என்பது குறித்து பார்க்கலாம்..
உயர்கல்வித்துறை செயலாளராக பணியாற்றி வந்த பிரதீப் யாதவ் ஐஏஎஸ், துணை முதலமைச்சரின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். கூடுதல் தலைமை செயலாளர் ரேங்கில் இருக்கும் இவர் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி மாற்றம் செய்யப்பட்டு கோவி செழியன் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டபோது மாற்றம் செய்யப்படலாம் என கூறப்பட்டது. எதிர்பார்த்தது போலவே பிரதீப் யாதவ் துணை முதல்வரின் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
1992 தமிழ்நாடு ஐஏஎஸ் பேட்ஜை சேர்ந்த பிரதீப் யாதவ் உத்திரபிரதேச மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர். திண்டுக்கல்லில் பயிற்சி ஆட்சியராக தனது ஐஏஎஸ் வாழ்க்கையை தொடங்கியவர். அதற்குப் பிறகு ஆற்காடு மாவட்ட துணை ஆட்சியராக பணியாற்றினார். தொடர்ந்து வருவாய்த்துறை, தொழில்துறை, கிராமப்புற மேலாண்மை, சமூக நீதி, மனிதவள மேம்பாடு, நிதி, நில வருவாய் மேலாண்மை உள்ளிட்ட துறைகளின் துணை செயலாளராக பணியாற்றியிருக்கிறார்.
தாய்லாந்து நாட்டில் மனிதவள மேம்பாடு பயிற்சி பெற்ற அவர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் தான் துறை செயலாளராக பதவி ஏற்க முடிந்தது. அப்போது பள்ளிக் கல்வித்துறை செயலாளராக பணியாற்றிய போது ஐந்து முதல் எட்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பால் சர்ச்சைக்கு உள்ளானார். அதேபோல பள்ளிக்கல்வித்துறை தொடர்பான வழக்கில் பிரதிப் யாதவுக்கு சிறை தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதற்குப் பிறகு கைத்தறி துறை முதன்மை செயலாளராக மாற்றம் செய்யப்பட்ட அவர், மின்சார துறை நிர்வாக இயக்குனராகவும் இருந்திருக்கிறார். மேலும் மெட்ரோ ரயில், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளராக இருந்தவர். தற்போது முதலமைச்சர் ஸ்டாலினின் உத்தரவுப்படி உதயநிதி ஸ்டாலினின் தனி செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications