“கிரீன் சிக்னல்” காட்டிய மத்திய மாநில அரசுகள்.. தாது மணல் வழக்குகளை மொத்தமாக விசாரிக்கும் ஹைகோர்ட்
சென்னை: தாது மணல் கொள்ளை தொடர்பான வழக்கில் இறுதி விசாரணையை தொடங்கியுள்ள சென்னை உயர்நீதிமன்றம் இது தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஒட்டுமொத்தமாக விசாரிப்பதாக அறிவித்து உள்ளது.
கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட கடலோரப் பகுதிகளில் தாது மணல் கொள்ளை தொடர்பாக கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் தமிழ்நாடு தொழில்துறை செயலாளர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது

அதில், தாது மணல் எடுப்பதற்காக, விவி மினரல்ஸ் உட்பட ஏழு நிறுவனங்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டு உள்ளதாகவும் சட்டவிரோதமாக தாது மணல் எடுக்கப்படுவதாக வந்த புகார்களை தொடர்ந்து தாது மணல் எடுப்பதற்கும் கொண்டு செல்வதற்கும் 2013 ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டு உள்ளதாக அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தடை விதிக்கும் முன்பும், தடை விதித்த பிறகும், சட்டவிரோதமாக தாது மணல் எடுத்ததால் ஏற்பட்ட 5 ஆயிரத்து 832 கோடியே 44 லட்சம் ரூபாய் இழப்பை, தனியார் தாது மணல் ஏற்றுமதியாளர்களிடமிருந்து வசூலிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், தனியார் நிறுவனங்கள் வசம் உள்ள ஒரு கோடியே 55 லட்சம் டன் தாது மணலை பறிமுதல் செய்து மத்திய அரசிடம் ஒப்படைக்க முடிவு செய்து உள்ளதாகவும் குறிப்பிட்டு இருந்தது.
மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட குழு மீண்டும் ஆய்வு செய்ததில், 2018 முதல் 2022 ஆண்டு வரை இடையேயான ஆண்டுகளில் மட்டும் சுமார் 16 லட்சம் டன் அளவிலான தாது மணல் சட்ட விரோதமாக கடத்தப்பட்டதாக தெரிய வந்துள்ளது. மேலும் சுமார் 6,449 டன் அளவிலான மோனோசைட் என்ற கனிமங்களும் கடத்தப்பட்டதாக தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து தற்போது 24 மணி நேரம் காவல்துறை கண்காணிப்பில் தாது மணல் பாதுகாக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் தத்தார், தாதுமணல் முறைகேடு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பட்டியலிட்டார். மேலும் நீதிமன்றத்துக்கு உதவ நியமிக்கப்பட்ட வழக்கறிஞரின் அறிக்கையின் அடிப்படையில் இழப்பீட்டுத் தொகையை வசூலிக்க நடவடிக்கை மேற்கொண்டதாகவும் சுட்டிக்காட்டினார்.
இந்த வாதத்தின்போது நீதிமன்றத்திற்கு உதவ நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் சுரேஷ் ஆஜராகி அரசுத் ஆவணங்கள் அடிப்படையில், இரண்டு ஆண்டுகளாக தன்னிச்சையாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இதுவரை மூன்று விரிவான அறிக்கைகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து உள்ளதாகவும், அந்த அறிக்கைகள் மத்திய அரசாலும் மாநில அரசாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார். தொடர்ந்து வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை மார்ச் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், தாது மணல் தொடர்பாக விதிக்கப்பட்ட தடை மற்றும் விசாரணை அறிக்கைகள், சட்டவிரோத கடத்தல் என அனைத்து வழக்குகளையும் ஒன்றாக விசாரிப்பதாக தெரிவித்து உள்ளனர்." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications