தாராபுரம் வழக்கறிஞர் முருகானந்தம் படுகொலை வழக்கை 3 மாதங்களுக்குள் முடிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு!
சென்னை: தாராபுரம் வழக்கறிஞர் முருகானந்தம் படுகொலை வழக்கை விசாரித்து 3 மாதங்களுக்கு முடிக்க காவல்துறை ஐஜிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், முருகனாந்தம் உடலை பெற்றுக்கொள்ள அவரது தாயாருக்கு அறிவுறுத்த அவர் தரப்பு வழக்கறிஞருக்கு உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (35). சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வந்தார். இவரது தந்தை லிங்கசாமி கடந்த 15 ஆண்டுக்கு முன்பு காங்கேயம் அருகே கூலிப்படையால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு ஈரோடு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால், முருகானந்தத்தின் சித்தப்பா தண்டபாணி உட்பட அனைவரும் விடுதலை ஆகினர்.

தாராபுரம் வழக்கறிஞர் கொலை பின்னணி
சித்தப்பா தண்டபாணிக்கு சட்டப்படி தண்டனை பெற்றுத்தர முருகானந்தம் முடிவு செய்தார். அவர் நடத்தும் மெட்ரிக் பள்ளியின் 4வது தளம் சட்டவிரோதமாக கட்டப்பட்டது என்று அதனை நீதிமன்றம் மூலம் இடித்து தள்ளினார். ஒட்டுமொத்த பள்ளி கட்டிடமும் முறைகேடாக கட்டப்பட்டுள்ளதாக மனு தாக்கல் செய்தார். இது தொடர்பாக பள்ளியின் உறுதி தன்மையை பார்வையிட முருகானந்தம், ரகுராம், அவரது வக்கீல் தினேஷ் உள்பட 4 பேர் பள்ளிக்கு சென்றனர்.
அப்போது அப்பகுதியில் பதுங்கி இருந்த கூலிப்படையினர் முருகானந்தம், ரகுராம், தினேஷ் ஆகியோரை வெட்டினர். இதில் முருகானந்தம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
பள்ளி தாளாளர் கூலிப்படை
இந்த கொலை வழக்கில் பள்ளியின் தாளாளர் தண்டபாணி மற்றும் கூலிப்படையை சேர்ந்த திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி (29), சேலம் போலூர் பகுதியை சேர்ந்த ராம் குமார் (22), நாமக்கல் சுந்தரம் (26), திருச்சி நாகராஜன் (29), தாராபுரம் நாட்டு துரை (65) ஆகியோர் போலீசில் சரண் அடைந்தனர்.
போலீசார் அவர்களை கஸ்டடி எடுத்து விசாரித்த நிலையில், மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் தேடி வந்தனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தனி பங்களாவில் பதுங்கியிருந்த ஆறு பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர். நாமக்கல்லை சேர்ந்த பாலமுருகன் (44), சதீஷ்குமார் (44), சசிகுமார் (33), சுதர்சன் (40), அண்ணாதுரை (36), முருகானந்தம் (50) ஆகியோரை நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
உடலை வாங்க மறுப்பு
இந்நிலையில், திருப்பூரில் அரசு மருத்துமவமனையில் வக்கீல் முருகானந்தத்தின் உடலை பிரேத பரிசோதனை செய்து தாய் சுபத்ராதேவி மற்றும் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க முயன்றனர். அப்போது, உடலை வாங்க மறுத்து உறவினர் திருப்பூர்- தாராபுரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளியின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய முருகானந்தம் சென்ற தகவலை தாராபுரத்தை சேர்ந்த சர்வேயர் ஒருவர் தாளாளர் தண்டபாணிக்கு தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையிலேயே தாளாளர் கூலிப்படையை ஏவி முருகானந்தத்தை கொன்றுள்ளார். எனவே, அந்த சர்வேயரை கைது செய்ய வேண்டும். தண்டபாணியின் மகன் வக்கீல் கார்த்திகேயனையும் கைது செய்ய வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம் என்று மறுத்துவிட்டனர்.
ஐகோர்ட் உத்தரவு
இதனையடுத்து திருப்பூர் எஸ்பி கிரீஸ் யாதவ் நடத்திய பேச்சுவார்த்தையை ஏற்க மறுத்த தாய் மற்றும் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து தாராபுரத்துக்கு புறப்பட்டனர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், கொலை வழக்கு விசாரணையை, சி.பி.ஐக்கு மாற்ற வேண்டும் என முருகானந்தத்தின் தாய் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த மனுவை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தாராபுரம் வழக்கறிஞர் முருகானந்தம் படுகொலை வழக்கை விசாரித்து 3 மாதங்களுக்கு முடிக்க காவல்துறை ஐஜிக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், முருகனாந்தம் உடலை பெற்றுக்கொள்ள அவரது தாயாருக்கு அறிவுறுத்த அவர் தரப்பு வழக்கறிஞருக்கு உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications