ரிதன்யாவின் பிரேத பரிசோதனை அறிக்கையை பார்த்து.. ஹைகோர்ட் அதிருப்தி
சென்னை: ரிதன்யாவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் உடல்ரீதியாக துன்புறுத்தப்பட்டார் என்பது குறித்து அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. மேலும் அந்த அறிக்கையும் முழுமையாக இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்த வழக்கு ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், அவினாசி கைகாட்டிபுதூரைச் சேர்ந்த ரிதன்யா என்ற 27 வயது பெண், வரதட்சிணை கொடுமை, கணவரின் டார்ச்சர் காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த விவகாரத்தில் ரிதன்யாவின் பெற்றோர் புகாரின் பேரில் ரிதன்யாவின் மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ரா தேவி, கணவர் கவின்குமார் ஆகிய மூவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் இவர்கள் திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர்.
அவர்களது மனுக்கள் நிராகரிக்கப்பட்டுவிட்டது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீது நீதிபதி நிர்மல் குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் (ரிதன்யா கணவர் வீட்டார்) சார்பில், "ரிதன்யாவுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என அவர் கூறியிருந்தார். மேலும் நாங்கள் இரு வீட்டாருமே பொருளாதாரத்தில் சம நிலையில் இருப்பதால் எங்களுக்கு வரதட்சிணை தேவை இல்லை.
3 ஆண்டுகளுக்கு முன்பே ரிதன்யா தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்" என வாதிட்டனர். இதையடுத்து ரிதன்யாவின் தந்தை தரப்பில், எனது மகள் தற்கொலை வழக்கில் விரிவாக விசாரணை நடத்தப்பட வேண்டும். ஜாமீன் கொடுத்தால் அவர்கள் சாட்சிகளை கலைத்துவிடுவார்கள்.
அவர்கள்தான் எனது மகளை கொடுமை செய்து தற்கொலை செய்யும் நிலைக்கு தூண்டிவிட்டனர். கவின் குமார் மனோதத்துவ ரீதியாக (மன நிலை பாதிப்பு வேறு, மனோதத்துவ ரீதியில் பாதிப்பு வேறு)பாதிக்கப்பட்டுள்ளார்" என தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பிரேத பரிசோதனை அறிக்கையை ஆய்வு செய்து அதிருப்தியை தெரிவித்திருந்தார். அந்த அறிக்கையில் போதுமான தகவல்களுடன் முழுமையாக இல்லை என தெரிவித்திருந்த நீதிபதி, ரிதன்யா உடல்ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்படவில்லையே?
ரிதன்யாவின் ஆடியோ பதிவு என்ன ஆனது? அந்த ஆடியோ அவருடைய செல்போனில் இருந்துதான் பதிவு செய்யப்பட்டதா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அப்போது காவல் துறை, " ரிதன்யா போனில் இருந்துதான் அந்த ஆடியோ பதிவு செய்யப்பட்டிருந்தது. ரிதன்யா- கவின் ஆகியோரின் போன்கள் தடயவியல் சோதனைக்குள்படுத்தப்பட்டுள்ளது.
அந்த அறிக்கைகள் 10 நாட்களுக்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். ரிதன்யாவுடன் படித்தவர்கள், அவருடைய உறவினர்களிடமும் வாக்குமூலம் பெற வேண்டியுள்ளது" என கூறப்பட்டது. இதையடுத்து தடயவியல் அறிக்கைகளை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications