சபரிமலை விவகாரம்... கேரளா அரசின் அப்பட்டமான சூழ்ச்சி... தமிழிசை ஆவேசம்
சென்னை: சபரிமலை விவகாரத்தில் கேரளாவில் சில லட்சம் பெண்கள் ஒன்று கூடி சுவர் எழுப்பினர். ஆனால் கோடிக்கணக்கான பெண்கள் தங்களது வீட்டில் இருந்து அழுது கொண்டும், தொழுது கொண்டும் இருக்கிறார்கள் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.
சபரிமலை கோயிலுக்குள் 2 பெண்கள் நுழைந்து தரிசனம் செய்ததை கண்டித்து சென்னை பல்லாவரம் பேருந்து நிலையம் அருகே பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சபரிமலைக்குள் பெண்கள் நுழைந்ததற்கு எதிர்ப்பு.. கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்!
போலீசார் வழக்கு பதிவு
ஆர்ப்பாட்டத்தின் போது கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் உருவபொம்மையும் தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்நிலையில் அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக பாஜக தமிழக தலைவர் சௌந்தர ராஜன் மற்றும் பாஜக நிர்வாகிகள் மீது பல்லாவரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மோசமான சூழ்நிலை
முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌத்தர ராஜன் கூறியதாவது: நயவஞ்சகமாக சட்டத்தை மீறி கேரள அரசு மோசமான சூழ்நிலையை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு தங்களது வன்மையான கண்டனத்தை தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
அப்பட்டமான சூழ்ச்சி
ஒரு மத்தியமைச்சரை கூட கோயில் உள்ளே அழைத்துச் செல்லாத கேரள அரசு, 2 பெண்களை மட்டும் போலீசாரின் பாதுகாப்புடன் கோயில் உள்ளே அழைத்துச் சென்றிருக்கிறார்கள் என்றால், இது அப்பட்டமான சூழ்ச்சி, கேரள அரசு விதிமீறலுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றார்.
யாரும் ஏமாற்ற முடியாது
கேரளாவில் சில லட்சம் பெண்கள் ஒன்று கூடி சுவர் எழுப்பினர். ஆனால் கோடிக்கணக்கான பெண்கள் தங்களது வீட்டில் இருந்து அழுது கொண்டும், தொழுது கொண்டும் தான் இருக்கிறார்கள் என்பது தனது கருத்து. இந்துக்கள் இனிமேல் விழித்தெழுவார்கள். இனிமேலும் அவர்களை யாரும் ஏமாற்ற முடியாது என்று கூறினார்.