சென்னை ஏர் ஷோ..5 பேர் மரணத்திற்கு என்ன காரணம்? நடந்தது என்ன? டிஜிபியிடம் ரிப்போர்ட் கேட்கும் உள்துறை
சென்னை: சென்னை விமான சாகச நிகழ்ச்சியை காண சென்றவர்கள் 5 பேர் மரணம் அடைந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தீவிரம் அடைந்து வரும் நிலையில் தமிழக போலீசார் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளனர். சென்னையில் விமான சாகச நிகழ்ச்சியை காணச் சென்ற 5 பேர் பலியான சம்பவத்தில், உரிய விளக்கத்தை அறிக்கையாக சமர்ப்பிக்க தமிழ்நாடு டிஜிபிக்கு அரசு சார்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு மாநில உள்துறை செயலர் தீரஜ் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். நேற்று சென்னையில் மிக சிறப்பாக விமான சாகச நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் 5 பேர் மரணம், அரசு சரியாக திட்டமிடவில்லை, பாதுகாப்பு பணிகளை செய்யவில்லை என்றெல்லாம் புகார்கள் வைக்கப்படுகின்றன. சென்னையில் நடந்த இந்த நிகழ்ச்சி, புதிய சாதனை படைத்தது உள்ளது. விமான கண்காட்சிக்காக அதிக அளவில் கூட்டத்தை ஈர்த்ததற்காக லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து உள்ளது.

இந்திய விமானப் படை 92 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், அதைக் கொண்டாடும் வகையில் சென்னை மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சிக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில்.. நேற்று நடந்த நிகழ்வில் 12-15 லட்சம் பேர் கலந்து கொண்டனர். இதில் 5 பேர் மரணம் அடைந்த சம்பவம் நாட்டையே அதிர வைத்துள்ளது.
விமானப்படை சாகசம்: இதற்கு இடையே, சென்னையில் விமானப்படை சாகச நிகழ்ச்சியைக் காணவந்து, கடும் வெயில் மற்றும் மருத்துவக் காரணங்களால் ஐவர் உயிரிழந்தது மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. உற்றாரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா 5 லட்ச ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்., என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் நடந்த விமானப்படையின் வான்வழி சாகச நிகழ்ச்சியைக் காணவந்து உயிரிழந்த 5 நபர்களின் குடுப்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி - மாண்புமிகு தமிழ்நாடு முதலைமச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை. நேற்று (06.10.2024) சென்னையில் இந்திய விமானப்படையினரால் சாகச நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சிக்குத் தேவையான நிருவாகரீதியிலான ஒத்துழைப்பையும், வசதிகளையும் செய்துகொடுப்பதற்காக இந்திய விமானப்படை கோரியிருந்ததற்கு மேலாகவே ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்கென தமிழ்நாடு அரசின் காவல்துறை, தீயணைப்புத்துறை, சென்னை பெருநகர மாநகராட்சி, மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஆகிய முக்கியத் துறைகள் ஒருங்கிணைந்து சிறந்ததொரு நிகழ்ச்சியை சென்னை மக்களுக்கு வழங்குவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
அதனால் கூட்ட நெரிசல் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. இருப்பினும் எதிர்பார்த்த எண்ணிக்கையைவிட மிகமிக அதிக அளவில் மக்கள் வந்திருந்ததால், நிகழ்ச்சி முடிந்த பின்னர் திரும்பச் செல்லும்போது மக்கள் தங்கள் வாகனங்களை அடைவதிலும், பொதுப்போக்குவரத்தைப் பெறுவதிலும் மிகுந்த சிரமம் அடைந்தனர் என்பதை அறிந்தேன். அடுத்தமுறை இதுபோன்ற பெரிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும்போது இவற்றில் கூடுதல் கவனமும் ஏற்பாடுகளும் செய்யப்படும். இந்நிகழ்வில், கடும் வெயில் மற்றும் பல்வேறு மருத்துவக் காரணங்களால் ஐந்து விலைமதிப்பற்ற உயிரிழப்புகள் ஏற்பட்டன என்பதை அறிந்து மிகுந்த மன வேதனையும், வருத்தமும் அடைந்தேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுக்கு இத்தருணத்தில் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஐந்து இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.












Click it and Unblock the Notifications