மலைப்பகுதிகளில் கட்டுமானம் வேளாண் துறை என்ஓசி வேண்டாம்.. தமிழக வீட்டுவசதி வாரியம் அதிரடி
சென்னை: மலைப்பகுதி பாதுகாப்பு குழும எல்லையில், கட்டுமான திட்ட அனுமதி கோருவோருக்கு முக்கிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை தந்த ஒப்புதலையடுத்து, இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
மலைப்பகுதிகளின் அருகில், பொதுமக்கள் வாங்கி வைத்திருக்கும் அனுமதியற்ற பட்டா வீட்டு மனைகளை எளிமையான முறையில் அனுமதி பெறுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று சமீபகாலமாகவே தமிழக அரசுக்கு பெயிரா கோரிக்கையை முன்வைத்து வருகிறது.

மலைப்பகுதிகள்: அதாவது, மலைப்பகுதியின் எல்லையிலிருந்து 500 மீட்டருக்கு வெளியில் உள்ள நிலங்களை கிராமம் அடிப்படையில் இல்லாமல் புல எண்கள் வாரியாக வகைப்படுத்தி HACA தடையின்மை சான்று பெறுவதற்கு ஏதுவாகவும் வீட்டுமனை பிரிவாக ஏற்படுத்துவதற்கு ஏதுவாகவும் அரசு வழிவகை செய்ய வேண்டும் என்பது பெயிராவின் நீண்ட கால வேண்டுகோளாகும்.
ஒரு எக்டேருக்குள் அபிவிருத்தி செய்யப்படும் புதிய வீட்டுமனை பதிவுகளுக்கு திறந்தவெளி நிலம் (OSR) ஒதுக்கீடு செய்ய வேண்டும், பதிவு பெற்ற பொறியாளர்களை ஒரே பதிவின் கீழ் மாநிலம் முழுவதும் ஒற்றைச்சாளர முறையில் விண்ணப்பிக்கும் வகையில் அனுமதி வழங்க வேண்டும் என்பதெல்லாம், அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் டாக்டர் ஹென்றி விடுத்து வரும் வேண்டுகோளாகும்.
தடையின்மை சான்றிதழ்: இப்படிப்பட்ட சூழலில், தடையின்றி சான்றிதழ் குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது.. அதன்படி, மலைப்பகுதிகளில் கட்டுமான திட்ட அனுமதி கோருவோர், தடையின்மை சான்றிதழ் பெற வேண்டிய பட்டியலில் இருந்து வேளாண் பொறியியல் துறையை நீக்க, வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை ஒப்புதல் அளித்திருக்கிறது.
தமிழகத்தில், 16 மாவட்டங்களில், 43 தாலுகாக்களில் உள்ள 597 கிராமங்கள், மலைப்பகுதி பாதுகாப்பு குழுமத்தின் கட்டுப்பாட்டில் வருகின்றன. இந்த பகுதிகளில் புதிய கட்டடங்கள் கட்ட அனுமதி கோருவோர், பல்வேறு துறைகளிடம் தடையின்மை சான்றிதழ் பெற வேண்டும். முக்கியமாக குறிப்பாக, வேளாண் பொறியியல், சுரங்கம், புவியியல், வனம் உள்ளிட்ட துறைகளிடம் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டியுள்ளது.
அனுமதி : இதில், வேளாண் பொறியியல் துறை, சுரங்கம் மற்றும் புவியியல் துறை ஆகியவை, ஒரே மாதிரியான விபரங்களை ஆய்வுசெய்து, தனித்தனியாக தடையின்மை சான்றிதழ் வழங்குகின்றன. இதனால், சுரங்கம் மற்றும் புவியியல் துறை ஆய்வு மட்டும் போதும் என்றும் வேளாண் பொறியியல் துறையின் தடையின்மை சான்றிதழ் பெறுவதில் விலக்கு அளிக்கலாம் என்றும் நகர், ஊரமைப்பு துறை அரசிடம் ஏற்கனவே பரிந்துரைத்தது.
இந்த பரிந்துரையை ஏற்று, மலைப்பகுதிகளில் கட்டுமான திட்ட அனுமதி கோருவோர், தடையின்மை சான்றிதழ் பெற வேண்டிய பட்டியலிலிருந்து வேளாண் பொறியியல் துறையை நீக்க, வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை தற்போது ஒப்புதல் அளித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications