12ம் வகுப்பு முடித்த பள்ளி மாணவர்களுக்கு! மிக முக்கிய அறிவிப்பு வெளியிட்ட தமிழ்நாடு அரசு! இதை படிங்க
சென்னை: 12ம் வகுப்பு முடித்த பள்ளி மாணவர்களுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்றை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் முடிந்துவிட்டன. இதில் 12ம் வகுப்பிற்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த நிலையில் நாளை 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.

இதில் 12ம் வகுப்பு தேர்வுகள் முடிந்த நிலையில் மாணவ, மாணவியர் பலரும் அடுத்து என்ன செய்யலாம், எந்த கல்லூரியில் சேரலாம் என்று ஆலோசனை செய்ய தொடங்கிவிட்டனர்.
பலருக்கும்.. முக்கியமாக கிராமப்புற மாணவர்களுக்கு எங்கே படிப்பது, எந்த கல்லூரியில் என்ன கோர்ஸ் எடுப்பது என்பது போன்ற தெளிவான திட்டமிடல் இல்லை.
இந்த நிலையில்தான் இவர்களுக்கான முக்கியமான அறிவிப்பு ஒன்றை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது. நான் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த திட்டமும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி விரும்பிய படிப்பை எந்த கல்லூரியில் படிக்கலாம், எப்படி விண்ணப்பிக்கலாம், கல்விக்கடன், உதவித்தொகை பெறுவது குறித்த ஆலோசனைகள் என அனைத்து விதமான சந்தேகங்கள் மற்றும் வழிகாட்டலுக்கு 14417 என்ற இலவச அழைப்பு எண்ணை அறிவித்துள்ளது பள்ளிக்கல்வித்துறை.
காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அழைத்து ஆலோசனைகள் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் career guidance cells எனப்படும் உயர்கல்வி ஆலோசனை குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த குழுவில் தலைமையாசிரியர்கள், உயர் கல்வி வழிகாட்டுதலில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் என்எஸ்எஸ் குழுவின் ஒரு பகுதியாக இருக்கும் நிர்வாகிகள் ஆகியோர் இடம்பெறுவர். .
இந்த குழு சார்பாக மாவட்ட அளவில் ஒரு பயிற்சி முகாம் நடத்தப்படும். அந்த பயிற்சி முகாமில் மாணவர்களை எப்படி வழி நடத்த வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்படும். அதன்பின் மாவட்ட அளவிலும், வட்ட அளவிலும் பயிற்சிகள் அளிக்கப்படும். அதை தொடர்ந்து மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்படும்.
மே 6ம் தேதியில் இருந்து மாணவர்களுக்கு நேரடியாக பள்ளிகளில் இது தொடர்பாக பயிற்சிகள் வழங்கப்படும். பள்ளிகளில் நீங்கள் உங்கள் மகன் அல்லது மகளுடன் சென்று ஆலோசனை பெற்றுக்கொள்ள முடியும்.
மாணவர்களுக்கான உதவித்தொகை பட்டியல் விவரங்கள், வெளி/ உள் மாநிலம் மற்றும் மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளின் பட்டியல், கட்-ஆஃப் மதிப்பெண்கள் குறித்த விவரம், எந்த பிரிவில் படித்தால் நல்ல எதிர்காலம் இருக்கும் என்று மாணவர்களுக்கு வழிகாட்டத் தேவையான தகவல்களை இந்த குழு வைத்து இருக்கும்.
பிற மாநிலங்கள் அல்லது மாவட்டங்களில் உள்ள நல்ல கல்லூரிகளில் தங்கள் குழந்தைகளை அனுப்பத் தயங்கும் பெற்றோர்களுக்கு அதற்கு உரிய ஆலோசனைகள் இவர்கள் மூலம் வழங்கப்படும்.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக பேர் கல்லூரி சேர்க்கிறார்கள். இதை தொடர்ந்து கடைபிடிக்கும் விதமாக தமிழ்நாட்டில் இந்த புதிய திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. பள்ளி படிப்பை முடிப்பவர்களில் மொத்தம் 49% பேர் தமிழ்நாட்டில் கல்லூரியில் சேர்க்கிறார்கள். அதாவது மத்திய அரசு 2035க்கு வைத்த இலக்கை நாம் 2019லேயே தொட்டுவிட்டோம். மற்ற மாநிலங்கள் எல்லாம் இதில் அதள பாதாளத்தில் இருக்கிறது.
மற்ற மாநிலங்களின் நிலை என்று பார்த்தால் கல்வியில் முன்னிலை வகிக்கும் கேரளாவில் ஜிஇஆர் 37% ஆக உள்ளது. அது போக டெல்லியில் அதிகமாக ஜிஇஆர் 46.3% ஆக இருக்கிறது. தெலுங்கானாவில் இது 36.2% ஆக இருக்கிறது. ஆந்திர பிரதேசத்தில் இது 32.4% ஆக இருக்கிறது. மகாராஷ்டிராவில் ஜிஇஆர் சதவிகிதம் 32 ஆக உள்ளது. கர்நாடகாவில் இது வெறும் 28%தான்.
இந்தியாவின் மொத்த ஜிஇஆர் சதவிகிதம் 28%தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இருக்கும் மாநிலங்களை தமிழ்நாடு முந்தியது மட்டுமின்றி பல வல்லரசு நாடுகளையும் தமிழ்நாடு இதில் முந்தி இருக்கிறது.
சீனாவின் ஜிஇஆர் சதவிகிதம் 43% ஆனால் தமிழ்நாட்டில் சதவிகிதம் 49. மலேசியாவின் ஜிஇஆர் சதவிகிதம் 45%. பஹ்ரைனின் ஜிஇஆர் சதவிகிதம் 47%. இப்படி வளர்ந்த நாடுகளை விட தமிழ்நாடு முன்னோடியாக உள்ளது.












Click it and Unblock the Notifications