"ஓ.. வசந்த ராஜா".. செம டைமிங்.. "ஆடிய ஆட்டம் என்ன".. எகிறி அடிக்கும் எடப்பாடி பழனிசாமி.. அப்ப அதுவா?
எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு பெருகும்பட்சத்தில், ஓபிஎஸ் ஓரங்கட்டப்படுகிறாரா
சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு, மெஜாரிட்டி ஆதரவுகள் கிடைத்து வருவதாக சொல்லப்படும் நிலையில், ஓபிஎஸ் ஓரங்கட்டப்படுகிறாரா? என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.
கடந்த 2 நாட்களாகவே அதிமுக அலுவலகம் பரபரப்பாகி உள்ளது.. வெளிப்படையாக இந்த ஆலோசனைகள் இரு தரப்பிலுமே நடந்து வந்தாலும், திரைமறைவில் வேறு சில விவகாரங்களும் ஓடிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
அதாவது, இந்த பிரச்சனை தொடர்பாக, ஓபிஎஸ்சிடம் எடப்பாடி தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஓபிஎஸ்சும் வழக்கம் போல சில பேரங்களை ஆரம்பித்ததாகவும், ஆனால், இந்த முறை பேரத்தின் தன்மை பல்வேறு வழிகளில் அதிகமாக இருந்ததால் எடப்பாடி அதனை ஒப்புக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.

ஸ்டண்ட்
அதனால் இரண்டு நாட்களாக இழுபறியிலேயே, முடிக்கப்படாமல் அந்த பேரங்கள் இருந்ததால்தான், தனது பேரங்களுக்கு எடப்பாடியை ஒப்புக் கொள்ள வைக்க வேண்டித்தான் நேற்றைய தினம் அவசர பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி காரசாரமாக பேட்டி கொடுத்தார் ஓபிஎஸ் என்கிறார்கள் நமக்கு நெருக்கமானவர்கள்.. இனியும் இந்த பேர பேச்சு தொடரும், இறுதியில் வழக்கம்போல் ஒரு முடிவுக்கு வரும் என்றும் சொல்கிறார்கள்.

தப்பு கணக்கு
அப்படியானால், ஓபிஎஸ் மறுபடியும் ஓரங்கட்டப்படுகிறாரா? எடப்பாடியிடம் கட்சியை ஒப்படைக்க பெரும்பாலான நிர்வாகிகள் தயாராகி வருவது சரியா? எடப்பாடி கணக்கு உண்மையிலேயே என்னவாக இருக்கிறது? என்பது குறித்து நாம் சில அரசியல் நோக்கர்களிடம் பேசினோம்.. அவர்கள் சொன்னதாவது:

எடப்பாடிக்கு செக்?
"ஓபிஎஸ்ஸின் வழக்கமான அரசியல் ஸ்டண்ட்தான் நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பு.. இப்போது என்றில்லை, எப்போது அதிமுகவுக்குள் தலைமை பதவி குறித்த விவகாரம் எழுந்தாலும், ஓபிஎஸ் இந்த பாணி அரசியலைதான் கையில் எடுப்பார்.. எடப்பாடி தரப்புக்கு செக் வைப்பார்.. கோபித்து கொள்வார்.. பிடிவாதம் பிடிப்பார்.. கடைசியில் எடப்பாடி பழனிசாமி என்ன தருகிறாரோ, அந்த சலுகையை பெற்றுக் கொண்டு அமைதியாகிவிடுவார்.. இந்த முறை, இது உடனடியாக நடக்கவில்லையே தவிர, விரைவில் அந்த முடிவுக்குதான் வருவார்.

லாக்கப் டெத்
எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை மிக சரியான காய்நகர்த்தலை செய்து வருகிறார்.. 80 சதவீத நிர்வாகிகள் எடப்பாடிக்கு கண்மூடித்தனமாக ஆதரவு தந்துவிட முடியாது.. அதேபோல, ஓபிஎஸ்ஸை எடப்பாடி டீம் கன்ட்ரோல் செய்கிறது என்ற வாதத்தையும் ஏற்க முடியாது.. காரணம், ஓபிஎஸ், பாஜக பக்கமும் சாய்கிறார், சில சமயம் திமுக பக்கமும் சாய்கிறார்.. "தமிழகத்தில் பாஜக வளருவது ஆபத்து" என்று சீனியர் தலைவர் பொன்னையன் பேட்டி தந்திருந்தார்.. ஆனால், அது பொன்னையனின் தனிப்பட்ட கருத்து என்று ஓபிஎஸ் சொல்கிறார் என்றால், உண்மையிலேயே இவரது நிலைப்பாடு என்ன? பாஜகவை எதிர்க்க கூடாது என்பதுதானே?

ஓ.ராஜா
மகனை அனுப்பி வைத்து, எதற்காக ஸ்டாலினை பாராட்ட சொன்னார்? தம்பியை அனுப்பி வைத்து, எதற்காக சசிகலாவை சந்திக்க சொன்னார்? தொண்டர்கள்தான் முக்கியம் என்று நேற்று சொல்கிறாரே, பிறகு ஏன் இதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்? இவருக்கு ஒரு பிரச்சனை என்றதுமே நேற்று செய்தியாளர்களை சந்தித்து உடனே பேட்டி தருகிறார்.. இதுவரை தமிழகத்தில் நடந்து வரும் லாக்கப் மரணம், உட்பட வேறு எந்த பிரச்சனைக்காவது அவசரமாக செய்தியாளர் சந்திப்பை கூட்டினாரா? வலுவாக திமுகவையோ, அல்லது பாஜகவையோ எதிர்த்தாரா?

காவி சாயம்
குறைந்தபட்சம் அண்ணாமலையை கண்டித்தாரா? நாங்கள்தான் மாற்று என்று பாஜக திமுகவுக்கு எதிராக போராட்டம் செய்து கொண்டிருக்கிறது.. இந்த ஒரு வருடத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள், திமுக, பாஜக என தாவி வருகிறார்கள்.. தொண்டர்களை பற்றி இந்த விஷயத்தில் ஓபிஎஸ் கவலைப்பட்டாரா? அதனால்தான், திமுகவை, பாஜகவை கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று எடப்பாடி நினைக்கிறார்.. ஓபிஎஸ்ஸுக்கு பொறுப்பை தந்தால், அதிமுக இன்னும் பலவீனமாகிவிடும் என்று கணக்கு போடுகிறார்.

ரவீந்திரநாத்
அதனால்தான், சம்பந்தமேயில்லாமல், "ஒற்றை தலைமை" என்ற விஷயத்தை, தன்னுடைய ஆதரவாளர்களை வைத்து பேச வைக்கிறார்... கட்சியை தன் கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள வேண்டும் என்ற முழு ஆசையும் எடப்பாடிக்கு இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.. அதேசமயம், ஓபிஎஸ்ஸை நம்பினால், பாஜகவிடம் சரண்டராகிவிடும் என்பதையும், சசிகலாவிடம் இணக்கமாகிவிடுவார் என்பதிலும் எடப்பாடி மிக ஜாக்கிரதையாகவே இருந்து வருகிறார்.. இதை உணர்ந்துதான், கட்சியின் முக்கிய தலைவர்கள், எடப்பாடிக்கு சப்போர்ட் செய்து வருகிறார்கள்.. இதுதான் கட்சிக்கு நல்லதும்கூட" என்று நம்மிடம் சொல்லி முடித்து கொண்டனர்.

வைத்திலிங்கம்
இதனிடையே, ஓபிஎஸ்ஸின் ஆதரவாளர்கள் குறைந்த அளவில் இருந்தாலும், அனைவருமே முக்கியமானவர்கள் என்பதால் அவர்களின் கருத்தையும், எடப்பாடி தரப்பு பரிசீலிக்க உள்ளது.. காரணம், ஏற்கனவே வைத்திலிங்கம் போன்றோர், அதிருப்தியில் உள்ளனர்.. அவர்கள் எந்நேரமும் சசிகலா பக்கம் தாவலாம் என்ற பேச்சும் உள்ளது.. ஓபிஎஸ்ஸுக்காக, அதிமுகவில் பொறுமையுடன் இருந்து வருவதாக தெரிகிறது.. இப்படிப்பட்ட சூழலில், ஒற்றை தலைமை என்ற பேச்சை அவர்கள் பெரும்பாலும் ரசிக்கவில்லை.. "ஒற்றை தலைமை குறித்து அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டு வந்தால், கட்சி அழிவுப்பாதைக்கு செல்லும்" என்று அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் மிகப்பெரிய செக் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications