Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக, பாமக வைத்த அக்னி பரீட்சையில் அசால்ட் வெற்றி பெற்ற திமுக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா அமோக வெற்றி பெற்றுள்ளதை அக்கட்சியினர் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடினர். திமுகவின் பிரதான எதிர்க்கட்சியான அண்ணா திமுக இடைத்தேர்தலை புறக்கணித்த நிலையில், தங்களது வாக்கு வங்கியை அப்படியே தக்க வைத்து அதிமுகவின் கணிசமான வாக்குகளையும் தங்கள் பக்கம் கொண்டு வந்து திமுக பிரம்மாண்டமான வெற்றியை அறுவடை செய்திருக்கிறது.

ஜனநாயகத்தில் தேர்தல் களத்தில் 'வெற்றி' ஒன்றுதான் பிரதானமானது. அந்த வெற்றிக்கான வியூகங்கள் விவாதப் பொருளாக, பேசுபொருளாக இருந்தாலும் பேசப் போவது என்னவோ 'ரிசல்ட்'தான். இதுதான் அரசியல் கட்சிகளின் அரிச்சுவடி பாடம். ஓட்டு அரசியலுக்குப் போய்விட்டு தத்துவம் பேசுவதைவிட களத்தின் அடிப்படையில் வெற்றியை அறுவடை செய்வதுதான் அத்தனை அரசியல் கட்சிகளும் கையில் எடுக்கும் வியூகம்.

vikravandi by election 2024 vikravandi by election results vikravandi by polls 2024 2024

திமுக வியூகம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தமிழ்நாட்டின் ஆளும் கட்சியான திமுகவும் இந்த வியூகத்தை மிகச் சரியாக 'வெற்றி' ஒன்றுதான் இறுதி இலக்கு என களம் கண்டது. திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை வேட்பாளராக அறிவித்தது முதல் அமைச்சர்கள் பட்டாளத்தையே களமிறக்கியது என ஒவ்வொரு நகர்வையும் 'மிதப்பில்' நகர்த்தாமல் 'கவனத்துடன்' காய் நகர்த்திக் கொண்டே வந்தது திமுக.

அதிமுக தேர்தல் புறக்கணிப்பு: திமுக களத்துக்குப் போன நிலையில் அண்ணா திமுக தேர்தலைப் புறக்கணித்தது. அண்ணா திமுகவின் தேர்தல் புறக்கணிப்பு திமுகவுக்கு மகிழ்ச்சியான செய்திதான் என்றாலும் களத்தில் அண்ணா திமுகவின் வாக்குகள் கவனமாக திமுக மடைமாற்றம் செய்வதற்கான உழைப்புதான் மிக முக்கியமானது. ஒருவகையில் திமுகவுக்கு அண்ணா திமுக வைத்த அக்னி பரீட்சையும் கூட. இதில் நிச்சயம் திமுக வென்றுள்ளது.

அதிமுக வாக்குகள்: விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வாக்கு வங்கி என்பது திமுகவுக்கு சவாலானதுதான். இன்னும் சொன்னால் 2019-ல் திமுகவின் எம்.எல்.ஏ. ராதாமணி இறந்த போது இடைத்தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் திமுகதானே அனுதாப ஓட்டுகளால் வென்றிருக்க வேண்டும். ஆனால் அண்ணா திமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வம் வென்றார். அதுவும் அவர் பெற்ற வாக்குகள் 1,13,766. விக்கிரவாண்டி தொகுதியில் திமுக68,842 ஓட்டுகளைத்தான் பெற்றது. அதிமுகவிடம் 44,924 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றது திமுகதான்.

சாதித்து காட்டிய திமுக: விக்கிரவாண்டியில் 2011-ல் சிபிஎம் வெல்ல அண்ணா திமுக வாக்கு வங்கிதான் காரணமாக இருந்தது. 2021 தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் 84,157; வென்ற திமுக வாக்குகள் 93,730. இதில் பாமகவின் வாக்குகளும் அடக்கம். திமுகவின் வாக்குகள் 90,000 என வைத்துக் கொண்டாலும் தற்போது 1.24 லட்சம் வாக்கு பெற்றுள்ளது. இது அதிமுகவின் வாக்கு கணிசமாக வந்து சேர்ந்ததால் கிடைத்தது என்பது வெளிப்படையான ஒன்று. பாமகவுக்கு சராசரியாக 30,000 முதல் 40,000 வாக்குகள் இத்தொகுதியில் இருக்கிறது என்பதை லோக்சபா தேர்தல் முடிவுகள் தெரிவித்தன. தற்போது 56,000 வாக்குகளை பாமக பெற்றுள்ளது என்பது அதிமுகவில் ஒரு பகுதி வாக்கு அங்கே திசை திரும்பி இருக்கிறது. ஆக அதிமுகவின் வாக்குகளை வெற்றிகர்மாக கொண்டு வந்து சேர்த்து சாதித்துக் காட்டியிருக்கிறது திமுக என்பது நிஜம்.

கள்ளச்சாராய சாவுகள்: இந்த களத்தில் நின்ற போதுதான் திமுக இன்னொரு நெருப்பாற்றில் நீந்த வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது. அதுதான் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள். மொத்தம் 66 உயிர்கள். திமுக ஆட்சி என்றாலே கள்ளச்சாராயம் ஆறாக ஓடும் என்றெல்லாம் கட்டவிழ்த்துவிடப்பட்ட பிரசாரங்களை மிக மிக கவனம் சிதறாமல் கையாண்டது ஆளும் திமுக. விக்கிரவாண்டி தேர்தல் களத்தில் ஒரு துளியேனும் 'கள்ளச்சாராய' பாதிப்பு இருந்துவிடக் கூடாது என்பதில் அதீத கவனத்தை செலுத்தியது திமுக.

வன்னியர் இடஒதுக்கீடு: இன்னொரு பக்கம் வட தமிழ்நாடு - வன்னியர் வாக்குகள். விக்கிரவாண்டியிலும் வன்னியர் வாக்குகள்தான் அதிகம். ஆனால் வட தமிழ்நாட்டில் வன்னியர் வாக்குகள் அதிகமாக கிடைப்பதும் திமுகவுக்குதான். வன்னியர்களின் இந்த நம்பிக்கையைத் தக்க வைக்க சட்டசபையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்த தீர்மானம் நிறைவேற்றியது; வன்னியருக்கான 10.5% இடஒதுக்கீடு தருவதில் உள்ள நடைமுறை சிக்கலை அனைவருக்கும் புரியும்படி செய்ய சட்டசபை தீர்மானம் விவாதத்தை உருவாக்கி கொடுத்தது. திமுகவுக்கு எதிராக பாமக தேர்தல் களத்தில் கையில் எடுத்த வன்னியருக்கான 10.5% இடஒதுக்கீடு எனும் பதமான கத்தியை பக்குவமாக தம் கைக்கு மாற்றி தமது வாக்கு வங்கியில் சிறு கீறலும் விழாத வகையில் பார்த்துக் கொண்டதும் மிக முக்கியமானது.

கட்டுப்பாடுடன் திமுக: சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி, லோக்சபா தேர்தலிலும் 40-க்கு 40 தொகுதிகளில் வெற்றி.. ஆளும் கட்சி நாம்தானே என்றெல்லாம் கட்சியினரை ஓவராக ஆடவிடாமல் வம்பிழுக்கும் எதிர்க்கட்சி தலைவர்களின் வம்படியான விமர்சனங்களுக்கும் அவதூறுகளுக்கும் இழிவு வசைகளுக்கும் எதிர்வினை என்ற பெயரில் இம்மியும் பந்தை எதிரிகள் கைக்கு தந்துவிடாமல் 'கட்டுப்பாடு' என்ற பெயரில் கட்டுப்படுத்தி வைத்துள்ளது திமுக. அதேபோல அரசல் புரசலாய் விமர்சனங்கள் எழுந்தாலும் கூட்டணி கட்சிகள் கைவிட்டுப் போகாமல் அவர்களின் வாக்குகளையும் முழுமையாக கொண்டு வந்து சேர்த்தது திமுக தலைமை.

திமுக தலைமையின் இத்தகைய வியூகங்களும் இத்தகைய கவனச் சிதறல் இல்லாத களமாடலும்தான் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் சரித்திரம் பேசும் சாதனை வெற்றியை கொடுத்திருக்கிறது என்பதுதான் கள யதார்த்தம்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+