ஆளுநருக்கு அதிகாரமே இல்லை! செந்தில் பாலாஜியை எப்படி நீக்க முடியும்? பாயிண்டை பிடித்த ஆளுர் ஷாநவாஸ்
சென்னை: செந்தில் பாலாஜியை அமைச்சர் பொறுப்பில் இருந்து ஆளுநர் ஆர்என் ரவி நீக்கம் செய்துள்ளார். இந்நிலையில் தான் மத்திய பாஜக அமைச்சர்களை ஏன் நீக்கம் செய்யவில்லை என கேள்வி எழுப்பியுள்ள ஆளுர் ஷா நவாஸ் எம்எல்ஏ, ஒருவரை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்ய ஆளுநருக்கு அதிகாரமே இல்லை அரசியலமைப்பு சட்டத்தின் பாயிண்டை சுட்டிக்காட்டி விளாசினார்.
முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து மின்சாரத்துறை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் வழங்கப்பட்டது.
அதேபோல் செந்தில் பாலாஜி நிர்வகித்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையை அமைச்சர் முத்துசாமியிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் ஆளுநர் ஆர்என் ரவியின் எதிர்ப்பையும் மீறி முதல்வர் ஸ்டாலின் அரசாணை பிறப்பித்து செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர வைத்தார்.

இதற்கிடையே தான் இன்று செந்தில் பாலாஜியை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்து ஆளுநர் ஆர்என் ரவி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் அமைச்சராக தொடர்வது விசாரணையை பாதிக்கும் எனக்கூறி ஆளுநர் ஆர்என் ரவி அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்துள்ளார்.
இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்எல்ஏவான ஆளுர் ஷா நவாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ‛ஒன் இந்தியா'வுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது: அமைச்சரவையில் யார் இருப்பது, இருக்க வேண்டாம் என்று முடிவு எடுப்பது முதல் அமைச்சர் தான். இது முதல்வருக்கு அரசியலமைப்பு சட்டமே வழங்கி உள்ள அதிகாரமாகும்.
முதல்வரின் அதிகாரத்தில் ஆளுநர் தேவையில்லாமல் தலையிட்டுள்ளார். வழக்கு நிலுவையில் உள்ளதை காரணம்காட்டி அமைச்சரவையில் இருந்து ஒருவரை நீக்க வேண்டும் என்றால் இன்றைக்கு பாஜக அமைச்சர்கள் தான் நீக்கப்பட வேண்டும். குறிப்பாக மத்திய அமைச்சர்கள் மீது பல வழக்குகள், குற்றச்சாட்டுகள் உள்ளன. அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியவர்கள் என்ற குற்றச்சாட்டு கூட உள்ளது. இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்காக ஒருவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றால் பாஜக அமைச்சர்களை பார்த்து தான் அந்த குரல் எழுப்ப வேண்டும்.
இருப்பினும் செந்தில் பாலாஜி மீது வழக்கு உள்ளது. விசாரணை நடந்து வருகிறது. தற்போது வரை நீதிமன்றம் அவரை குற்றவாளி என கூறவில்லை. எந்த நீதிமன்றமும் தண்டனை வழங்கவில்லை. 2 ஆண்டுகளுக்கு அதிகமாக தண்டனை பெற்றால் தான் அமைச்சரவையில் இருந்து நீக்க முடியும். நீதிமன்றத்திலேயே வழக்கு சென்றபோது நீதிமன்றம் அதைத்தான் சுட்டிக்காட்டி உள்ளது. தண்டனை பெற்றுள்ளரா? என்ற கேள்வியை நீதிமன்றம் எழுப்பி உள்ளது. இந்த கேள்வி எழுப்பப்பட்டு 2 நாட்கள் கூட ஆகாத நிலையில் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக ஆளுநர் ஆர்என் ரவி இப்படி செயல்பட்டுள்ளார்.
இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உச்சநீதிமன்றத்தை நாடுவதாக திமுக அறிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் பஞ்சாப், மகாராஷ்டிரா, டெல்லி ஆளுநர்கள் தொடர்பான வழக்குகளில் குத்து விழுந்துள்ளது. அரசியலமைப்பு சட்டத்தின் படிதான் ஆளுநர்கள் செல்ல வேண்டும் என நீதமின்றம் கூறியுள்ளது. இந்த வழக்குகளின் நீட்சியாக இதில் தமிழக அரசுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கும். வழக்கம்போல் ஆளுநர் ஆர்என் ரவிக்கு பின்னடைவு ஏற்படும்.
மேலும் மத்திய அமைச்சர் அமித்ஷா மீது வழக்கு இருக்கிறதா இல்லையா? பல அமைச்சர்கள் மீது வழக்கு உள்ளது. அமலாக்கத்துறை என்பது மோடி, அமித்ஷாவின் கைகளில் உள்ளது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி அதிகாரத்தை பயன்படுத்தி அமலாக்கத்துறையின் விசாரணையில் தலையிட முடியாது. அதோடு அமலாக்கத்துறை மிகவும் அதிகாரம் படைத்த அமைப்பாகும். அது பாஜகவின் கைப்பாவையாக உள்ளது. தன்னிச்சையாக இயங்கவில்லை. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜியின் நீக்கத்துக்கான காரணம் என்பது முட்டாள்தனமாக உள்ளது.
செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறைக்கு பெரிய அடி விழுந்துள்ளது. உயர்நீதிமன்றம் மீது நம்பிக்கையின்றி உச்சநீதிமன்றம் சென்றனர். உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றத்துக்கு அனுப்பியது. திமுக வழக்கறிஞர்களின் வாதத்தை எதிர்கொள்ள முடியாமல் வாய்தா வாங்கிவிட்டு அமலாக்கத்துறை சென்றுள்ளது. அமலாக்கத்துறையால் தற்போது ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதால் ஆளுநர் மூலம் இதுபோல் செய்ய முயற்சிக்கின்றனர். இது வன்மத்தின் வெளிப்பாடு.
அரசியலமைப்பு சட்டத்தின் படி அமைச்சரவையில் யார் இருக்க வேண்டும் என்பதை முதல்வர் தேர்வு செய்வார். முதல்வர் பரிந்துரையின்படி ஆளுநர் செயல்பட வேண்டும். ஆளுநர் பதவி என்பது அவ்வளவுத்தான். தற்போது செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர வைத்தது என்பது பாஜகவுக்கான பதிலடி நடவடிக்கை தான். பாஜக நினைப்பது இங்கு நடக்காது என்பதை கூறும் குறியீடாக தான் இது உள்ளது'' என சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications