ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு! பாடிய பாடகர் ஜெயசந்திரன் எப்படி இருக்கிறார்! வதந்திகளுக்கு ஃபுல்ஸ்டாப்!
சென்னை: பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரனின் உடல்நிலை குறித்து சமூகவலைதளங்களில் வரும் வதந்திகளுக்கு அவருடைய குடும்பத்தினர் விளக்கம் அளித்துள்ளனர். இந்த விளக்கத்தில் அவர் எப்படி இருக்கிறார் என்பது குறித்தெல்லாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலையாள பாடகரான இவர் தமிழில் இளையராஜா இசையில் பாடத் தொடங்கியதை அடுத்து பிரபலமடைந்தார். இவர் வசந்தகால நதிகளிலே, ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு, காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி, மயங்கினேன் சொல்ல தயங்கினேன், கொடியிலே மல்லிகை பூ உள்ளிட்ட பாடல்களை பாடியுள்ளார்.

இந்த நிலையில் அவருடைய உடல்நிலை குறித்து சமூகவலைதளங்களில் வதந்திகள் பரவியது. இதுகுறித்து அவர் குடும்பத்தினர் அளித்துள்ள விளக்கத்தில் இரு மாதங்களுக்கு முன் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு திரும்பிய போது எடுத்த அவரது புகைப்படத்தை வெளியிட்டு வதந்தி பரப்புகிறார்கள்.
வயது முதிர்வு தொடர்பான சிக்கல்கள் இருக்கத்தான் செய்கிறது. எனினும் அவர் நலமாகவே இருக்கிறார் என தெரிவித்துள்ளனர். மலையாள தேசத்திலிருந்து தமிழகத்திற்கு வந்து தமிழ் ரசிகர்களை கட்டி போட வந்தவர் பளியத்து ஜெயசந்திரக்குட்டன் என்கிற பி.ஜெயசந்திரன். இவர் 1944 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 ஆம் தேதி எர்ணாகுளத்தில் உள்ள ரவிபுரம் பகுதியில் பத்ராலயம் என்ற சிறிய ஊரில் மூன்றாவது பிள்ளையாக பிறந்தார்.
இவர் 14 வயதிலேயே மிருதங்க கலைஞராக சிறப்பிக்கப்பட்டார். 1976-ல் வெளிவந்த பாலசந்தரின் 'மூன்று முடிச்சு' படத்தில் ஜெயச்சந்திரன் வாணி ஜெயராமுடன் பாடிய 'ஆடி வெள்ளி தேடி வந்த', 'வசந்த கால நதிகளிலே' ஆகிய பாடல்கள் பெரிய வெற்றியைப் பெற்றன.
இளையராஜாவின் இசையில் முதல்முதலாக 'காற்றினிலே வரும் கீதம்' படத்தில் பாடிய 'சித்திரச் செவ்வானம் சிரிக்கக் கண்டேன்' பாடலும், 'கிழக்கே போகும் ரயி'லின் 'மாஞ்சோலைக் கிளிதானோ' பாடலும் பெரு வெற்றிபெற்று முன்னணிப் பாடகர் வரிசையில் ஜெயச்சந்திரனைச் சேர்த்தன.
கே. பாக்யராஜின் சிறந்த திரைக்கதை அமைப்புக்கான படங்களில் முதலிடத்தில் இருக்கும் 'அந்த ஏழு நாட்கள்' படத்தில் 'கவிதை அரங்கேறும் நேரம்' பாடலை எஸ். ஜானகியுடன் இணைந்து வெகு அற்புதமாகப் பாடி அசத்தி இருப்பார் ஜெயச்சந்திரன். 'கடல் மீன்கள்' படத்தில் 'தாலாட்டுதே வானம்' என்று எஸ். ஜானகியுடன் சேர்ந்து இசையலைகளை மனத்தில் பாயவைத்தார் ஜெயச்சந்திரன்.
அது போல் இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே உள்ளிட்ட பாடல்களையும் ஜெயசந்திரன் பாடியுள்ளார். ரஜினிகாந்த்தின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றான 'ஆறிலிருந்து அறுபதுவரை' படத்தில் 'வாழ்க்கையே வேஷம்' பாடலில் சொந்தபந்தங்களால் ஒதுக்கப்பட்ட ஒரு மனிதனின் மனநிலையைத் தனது குரலால் அற்புதமாக வெளிப்படுத்தி இருப்பார் ஜெயச்சந்திரன்.
விக்ரமனின் 'பூவே உனக்காக' படத்தில் எஸ்.ஏ. ராஜ்குமாரின் இசையில் சுஜாதாவுடன் பாடிய 'சொல்லாமலே யார் பார்த்தது' பாடலை ஜெயசந்திரன்தான் பாடினார். இவரை மலையாள மக்கள் ஜெயேட்டா என பாசத்துடன் அழைக்கிறார்கள். 80 வயதிலும் பாடி பில்டரை போல் கட்டுமஸ்தான உடலை கொண்டவர் ஜெயசந்திரன்.












Click it and Unblock the Notifications