மு.கருணாநிதி “கலைஞர்” ஆனது எப்படி? காலம் தாங்கி நிற்கும் அடைமொழி வைத்த கூலித் தொழிலாளி யார்?
சென்னை: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 4 வது நினைவு நாளை திமுகவினரும் தமிழ்நாடு அரசும் இன்று கொண்டாடி வரும் நிலையில், அவரை "கலைஞர்" என்று திமுகவினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அழைப்பதன் பின்னணி என்னவென்று பார்ப்போம்.
ஈ.வே.ராமசாமி "தந்தை பெரியார்" என்று அழைக்கப்படுவதைபோல், அண்ணாதுரை "அறிஞர் அண்ணா" என்று அழைக்கப்படுவதைபோல் திராவிட இயக்கத்தில் இவர்களின் வழித்தோன்றலான கருணாநிதி "கலைஞர் கருணாநிதி" என்று அழைக்கப்பட்டு வருகிறார்.
திமுகவினர் மற்றும் கருணாநிதியின் அபிமானிகள் பலரும் கலைஞர் என்றே மரியாதை நிமித்தமாக அவரை அழைத்து வருகின்றனர். திமுக ஆட்சியில் அரசு கொண்டு வரும் திட்டங்களின் பெயர்களும் கலைஞர் என்ற பெயருடனே அறிமுகம் செய்யப்பட்டன. திமுகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியின் பெயரும் கலைஞர் என்றே வைக்கப்பட்டது.
'கனி இங்கே வாமா..' கருணாநிதி நினைவிடத்தில் தங்கையை பாசமுடன் அழைத்து பக்கத்தில் நிறுத்திய ஸ்டாலின்!
எப்படி வந்தது?
இப்படி கருணாநிதி மறைந்தாலும் காலம் கடந்தும் ஒலித்துக் கொண்டிருக்கும் இப்பெயர் அவருக்கு எப்படி வந்தது என்ற வரலாறு பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. முத்தமிழறிஞர் என்பன உள்ளிட்ட பல அடைமொழிகள் கருணாநிதிக்கு இருந்தாலும் அவரது அடையாளமான "கலைஞர்" என்ற படத்தை சூட்டியது ஒரு சாதாரண கூலித் தொழிலாளி என்பதை உங்களால் நம்ப முடிகிறதா?
கூலித் தொழிலாளி
அரசியலுக்கு இணையாக சினிமா மற்றும் நாடகங்களில் தனது கூர்மையான வசனங்களால் பிரபலமாக இருந்த கருணாநிதி எம்.ஆர்.ராதாவுடன் இணைந்து தூக்குமேடை நாடகத்தில் பணியாற்றி இருக்கிறார். அந்த நாடகத்தில் எலெக்ட்ரிசியனாக பாஸ்கரன் என்ற கூலித் தொழிலாளி பணிபுரிந்து உள்ளார். இந்த நாடகத்துக்கான அதன் விளம்பர தட்டிகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட அவருக்கு ஒரு யோசனை தோன்றியுள்ளது.
எம்.ஆர்.ராதா
உடனே அங்கிருந்த எம்.ஆர்.ராதாவை சந்தித்த பாஸ்கரன், தந்தை பெரியார், அறிஞர் அண்ணாவுக்கு இருப்பதைபோல் கருணாநிதிக்கு ஏன் கலைஞர் என்று அடைமொழி வைத்து விளம்பரம் செய்யக்கூடாது என கோரிக்கை வைத்து இருக்கிறார். இதற்கு எம்.ஆர்.ராதா ஒப்புதல் வழங்கி உள்ளார். உடனே மகிழ்ச்சியாக விளம்பர தட்டியில் கூலித் தொழிலாளி பாஸ்கரன் கலைஞர் கருணாநிதி என்று கூறி உள்ளார்.
தூக்குமேடை நாடகம்
இதனை தொடர்ந்தே தூக்கு மேடை நாடக விளம்பரங்களில் கலைஞர் கருணாநிதி என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இதன் பின்னர் எம்.ஆர்.ராதா உரையாற்றும்போது கலைஞர் கருணாநிதி என்று கூறினார். இந்த பெயர் கருணாநிதிக்கும் பிடித்துவிடவே அவர் அதற்கு மறுப்பேதும் சொல்லாமல் ஏற்றுக்கொண்டாராம். அன்றிலிருந்து இன்று வரை பல தலைவர்கள் கூலித் தொழிலாளி வைத்த "கலைஞர்" என்ற அடைமொழியுடன் சேர்த்து கருணாநிதி என்று அன்போது அழைத்து வருகின்றனர்.